கிருஷ்ணகிரி, ஜூன் 26 –
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர குறை தீர்வு நாள் கூட்டத்தில் மகனிடம் இருந்து சொத்தை மீட்டு தரக்கோரி தாய், தந்தை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கோவிந்தாபுரம் கெடகானூர் கிராமத்தில் வசித்து வரும் தங்கவேல், சென்னம்மாள் ஆகியோருக்கு கௌரம்மாள், கோவிந்தம்மாள் என இரு மகள்களும் சக்கரவர்த்தி, குகானந்தன், நாராயணன் ஆகிய மூன்று மகன்களும் உள்ளனர்.
இந்நிலையில் இரண்டு ஏக்கர் நிலம், கிணறு ஆகிய சொத்துக்களை ஊத்தங்கரை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு குகானந்தன் அழைத்துச் சென்று மிரட்டி எழுதி வாங்கியதாகவும் சொத்துகள் அனைத்தும் உங்களிடமே இருக்கும் என சொல்லி பொய்யாக நிலத்தை எழுதி வாங்கிவிட்டார். மேலும் எங்களிடமிருந்து ஏமாற்றிய சொத்தினை திருப்பத்தூர் மாவட்டம் குரும்பேரி கிராமத்தைச் சேர்ந்த பாண்டுரங்கன் மற்றும் கோவிந்தராஜ் ஆகியோர் சொத்தினை கிரயம் பெற்று விட்டதாக கூறி அளக்க வந்தனர். அப்போதுதான் எனது சொத்து விற்கப்பட்டதாக அறிந்தேன்.
இந்நிலையில் சொத்தினை நாங்கள் வாங்கி விட்டோம் இது அளக்க வேண்டும் என்று அடாவடி செய்து அடிக்க வருகிறார்கள் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் தனது மகனிடமிருந்தும் அடாவடி செய்பவர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொண்டு சொத்தினை மீட்டுத் தர கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு அளித்த பிறகு செய்தியாளரிடம் தெரிவித்தனர்.