தஞ்சாவூர், ஜூன் 21 –
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் கலந்து கொண்டார்.
திருவையாறு பகுதியில் மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு உடனுக்குடன் தீர்வு காண அரசு உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்ட முகாம் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது. இதன்படி மேல திருப்பந்துருத்தி அரசு தொடக்கப்பள்ளியில் மாணவ மாணவிகளின் கல்வித்திறன், சமையல் கூடம், கழிவறை வசதி போன்ற அடிப்படை வசதிகள் குறித்தும் வளம்பக்குடி ஊராட்சியில் கலைஞரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் புதிய வீடு கட்டுமானப் பணிகளை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் ஆய்வு செய்தார். மன்னர் சமுத்திரம் ஊராட்சியில் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் எடை, உணவு மற்றும் கல்வித் திறன் குறித்து மாவட்ட கலெக்டர் கேட்டறிந்தார். தொடர்ந்து வளம்பக்குடி ஊராட்சி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நர்சரியில் 25 ஆயிரம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்வதை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் திருவையாறு சகாய மாதா திருமண மகாலில் ஏராளமான மக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்ற மாவட்ட கலெக்டர் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். தொடர்ந்து 6 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார். ஆய்வின்போது திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரன், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாலகணேஷ், சமூக பாதுகாப்பு திட்டம் தனி துணை கலெக்டர் மணிமாறன், திருவையாறு நகராட்சி தலைவர் கஸ்தூரி நாகராஜன், நகராட்சி ஆணையர் மதன்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.