தருமபுரி, ஜூன் 19 –
தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் கீழ் பணிபுரியும் மாவட்ட திட்ட அலுவலர்கள், குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்கள், மாவட்ட மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோருக்கான ஆய்வுக்கூட்டம் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் நடைபெற்றது. தருமபுரி மாவட்டக் கண்காணிப்பு அலுவலர் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட பணிகள் இயக்குனர் மெர்சி ரம்யா தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் முன்னிலை வகித்தார். இயக்குனர் மெர்சி ரம்யா பேசுகையில் கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், 0-6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஆகியோர் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பயனடைவதை உறுதி செய்ய வேண்டும். மேலும் ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளின் நலனைத் தொடர்ந்து கண்காணித்து அவர்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். தருமபுரி மாவட்டம் காரியமங்கலம் வட்டம், காரியமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அடிலம் குழந்தைகள் மையம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அடிலம் நபார்டு வங்கி நிதியின் மூலம் கட்டப்பட்டு வருகின்ற மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகள் ஆகியவை குறித்து ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப் பணிகள் இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் கேத்தரின் சரண்யா, தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, மாவட்டத் திட்ட அலுவலர், காரியமங்கலம் வட்டாட்சியர் மற்றும் காரியமங்கலம் வட்டாட்சியர் வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட பணிகளின் கீழ் பணி புரியும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.