திண்டுக்கல், ஜூன் 19 –
திண்டுக்கல் குஜிலியம்பாறையில் ஆதித் தமிழர் அருந்ததியர் முன்னேற்றக்கழகம்
மற்றும் புரட்சித்தமிழர் கட்சி சார்பில் குஜிலியம்பாறை தாலுகா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வடமதுரை, குஜிலியம்பாறை, வேடசந்தூர் ஒன்றியங்களில் உள்ள அருந்ததியர் உள்ளிட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 1892 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியில் வழங்கப்பட்ட பஞ்சமி நிலத்தை பஞ்சமருக்கே வழங்கக் கோரி தமிழக அரசையும், மாவட்ட நிர்வாகத்தையும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆதித்தமிழர் அருந்ததியர் முன்னேற்றக் கழகம் மாநிலத் தலைவர் கே.எஸ்.சத்தியசீலன் ஆர்ப்பாட்டத்தைத் துவக்கி வைத்து எழுச்சி உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் திருமூர்த்தி தலைமை வகித்தார். திண்டுக்கல் மாவட்ட பொறுப்பாளர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். மாவட்டத் தலைவர் சின்னக் காளை வரவேற்பு உரையாற்றினார். மேலும் ஆர்ப்பாட்டத்தில் மாநிலப் பொதுச்செயலாளர்
முத்துகிருஷ்ணன், தலைமை நிலையச் செயலாளர் ராமன் ஆகியோர் எழுச்சி உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.