ஈரோடு, ஜூன் 19 –
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா புதிய விரிவான மினிபஸ் திட்டத்தின் கீழ் 70 பேருந்துகளுக்கான அனுமதிச்சீட்டினை பேருந்து உரிமையாளர்களுக்கு வழங்கி கொடியசைத்துத் துவக்கி வைத்தார். போக்குவரத்துத் துறையின் சார்பாக விரிவான மினிபஸ் திட்டம் – 2024 அரசாணை அறிவிக்கப்பட்டு ஈரோடு மாவட்டத்தில் 65 புதிய வழித்தடங்கள் கண்டறியப்பட்டு 97 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதில் ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்ட வழித்தடங்களுக்கு குலுக்கல் முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 65 விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டது. அதில் தற்போது 4 புதிய பேருந்துகளுக்கு அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டு சேவை துவக்கி வைக்கப்பட்டது. மேலும் இடம்பெயர்வு வழித்தட திட்டத்தின் கீழ் 69 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதில் 66 வாகனங்களுக்கு இடம்பெயர்வு திட்டத்தின் கீழ் இயங்குவதற்கும் அனுமதிச்சீட்டு சேவை துவக்கி வைக்கப்பட்டது. இப்புதிய பேருந்து போக்குவரத்து சேவையானது குக்கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு நகர்புறப் பகுதிகளுக்கு வந்து செல்ல பயனுள்ளதாக அமையும். இன்றைய தினம் அனுமதி வழங்கப்பட்ட 4 புதிய பேருந்துகள் மற்றும் இடம்பெயர்வு வழித்தடம் திட்டம் 66 பேருந்துகளின் சேவைகளும் மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்து அனுமதிச்சீட்டினை பேருந்து உரிமையாளருக்கு வழங்கினார். இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.சி.சந்திர குமார், அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம், ஈரோடு மாநாகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம், துணை மேயர் செல்வராஜ், துணைப் போக்குவரத்து ஆணையர் செல்வகுமார், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் பதுவைநாதன், மாதவன் மற்றும் மோட்டார் மாவட்ட மினி பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஜெகதீசன், செயலாளர் சுரேஷ், பொருளாளர் கார்த்தி மற்றும் வாகன ஆய்வாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.