அரசு மருத்துவமனையில் ஆண்களுக்கான சிகிச்சை பிரிவில் குட்டிகளை ஈன்ற தெரு நாய்.மருத்துவர் பற்றாக்குறையாலும் சுகாதார சீர்கேட்டாலும் அவதிப்பட்டு வரும் நோயாளிகள்
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.இந்த அரசு மருத்துவமனையில் தினமும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த 300 க்குக்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இந்த மருத்துவமனையில் 13 மருத்துவர்கள் பணியாற்றி வந்த நிலையில் தற்போது மூன்று மருத்துவர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.
அதே பேன்று செவிலியர்களும் குறைவாக உள்ளனர்.குறிப்பாக சுகாதார ஊழியர்களும் குறைந்த அளவே இருப்பதால் மருத்துவமனை சுகாதாரமற்ற நிலையில் உள்ளது.இதன் காரணமாக கழிவுநீர் மருத்துவமனை வளாகத்தில் தேங்கி இருப்பதால் நோயாளிகளுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.புற நோயாளிகள் சிகிச்சை பிரிவில் ஒரு மருத்துவர் மட்டுமே இருப்பதாகவும் அவர் காலை 8 மணி முதல் 12 மணி வரை எத்தனை பேருக்கு மருத்துவம் பார்க்க முடியும் என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.குறிப்பாக இங்கு மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால் நோயாளிகளை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பாக இந்த மருத்துவமனையில் உள்ள ஆண்கள் உள் நோயாளிகள் சிகிச்சை பிரிவில் தெரு நாய் ஒன்று குட்டிகளை ஈன்று அங்கேயே இருப்பதால் நோயாளிகள் அச்சத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.இத்தகைய சுகாதார சீர்கேட்டுடனும் உரிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாத நிலையிலும் இயங்கி வரும் இந்த நன்னிலம் அரசு மருத்துவமனையை சுற்றி 25க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருக்கும் நிலையில் இந்த மருத்துவமனையை உரிய முறையில் பராமரித்து மருத்துவர்களை நியமித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.