கலெக்டர் எச்சரிக்கை நாகர்கோவில், மே 5:
குமரி மாவட்ட கலெக்டர் அழகு மீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழில் அமைக்கப்படுதல் வேண்டும். தமிழில் முதன்மையானதாகவும், பெரிதாகவும் பின்னர் ஆங்கிலத்திலும் அதன் பின்னர் இதர மொழிகளிலும் முறையே 5:3:2 என்ற விகிதத்தில் அமைக்கப்பட வேண்டும். தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை அமைப்பதை உறுதி செய்யும் பொருட்டு மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் தொழிலாளர் துறை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், தமிழ் வளர்ச்சி துறை, உள்ளாட்சி அமைப்புகள், வணிகர் சங்கங்களின் பிரதிநிதிகள், உணவு நிறுவன உரிமையாளர்கள், சங்கப் பிரதிநிதிகள், வேலை அளிப்பவர் சங்கங்களின் பிரதிநிதிகள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இக்குழுவினரால் அனைத்து கடைகள் வணிக நிறுவனங்கள் தொழிற்சாலைகளில் தமிழில் பெயர் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து கடைகள், உணவகங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் பெயர் பலகைகளை தமிழில் முதன்மையானதாக பெரிய அளவில் அமைத்திட வரும் 15-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது. இக்கால அவகாசத்திற்குள் நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழில் அமைக்கப்படுவது தொடர்பான வழிமுறைகளை கடைப்பிடித்திட வேண்டும். 15ம் தேதிக்கு பின்னரும் சட்ட விதிகளின்படி தமிழில் பெயர் பலகை அமைக்காத உரிமையாளர்களிடம் பொறுப்பான நபர்களிடம் மறு விளக்கம் கேட்கும் அறிவிப்பு வழங்கப்பட்டு, தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து வணிகர் சங்கங்கள், உணவு நிறுவனங்கள், பள்ளி கல்லூரிகள் மற்றும் தொழிற்சாலைகளில் தமிழில் பெயர் பலகைகளை சட்ட விதிகளின்படி அமைத்து மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிடவும் அபராதம் செலுத்துவதை தவிர்க்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.