நாகர்கோவில் மே 2
நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகி மரிய ஜெனிபர் வெளியிட்டுள்ள மே தின வாழ்த்து செய்தியில் தெரிவித்து இருப்பதாவது :-
உலகம் இன்னும் இயங்கிக்கொண்டிருக்கவும் பரிணாம ஓட்டத்தில் மனிதன் தப்பிப் பிழைத்துக்கொண்டிருக்கவும் முழுமுதல் காரணமாக இருக்கும் உழைப்பாளர்களையும் உழைப்பையும் இத்தருணத்தில் போற்றுவோம்.
” அரசு என்பது தொழிலாளி வர்க்கத்தை முதலாளி வர்க்கம் ஒடுக்குவதற்கான அமைப்பே. ஒடுக்குமுறையை சட்டரீதியாக்கி அதை நிலையானதாக்குவதே அரசு ” என்கிறார் மாமேதை லெனின். இன்றைய சூழலிலும் இது முழுமையாக பொருந்துகிறது.
எந்த தொழிலாளியும் முதலாளித்துவத்தின் சுரண்டலிலிருந்தோ , முதலாளித்துவத்தின் முகமாக இருக்கும் அரசின் அடக்குமுறையிலிருந்தோ தப்பமுடியாத நிலைதான் இருக்கிறது.
தமிழ்நாடு முழுவதும் அனைத்து தொழிலாளர்களும் தினம் தினம் தங்கள் உரிமைகளுக்காக வீதியில் இறங்கி போராடும் நிலை தான் இருக்கிறது.
எந்த அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் தொழில் பாதுகாப்பு இல்லை. பெரும் கார்ப்பரேட் தொழிலாளர்களுக்கு கூட பணியிட பாதுகாப்பு இல்லை.
கடலுக்கு மீன்பிடிக்க செல்பவர்களுக்கு உயிர் பாதுகாப்பு இல்லை , விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பு இல்லை , கல் தொழில் செய்பவர்களுக்கு சட்டப் பாதுகாப்பு இல்லை ,இரப்பர் பால் வெட்டுபவர்களுக்கு அடிப்படை விலை இல்லை , ஆட்டோ ஓட்டுனர்களுக்கு மீட்டர் கட்டணம் உயர்த்தப்படவில்லை
ஊதிய உயர்வு , பணி நிரந்தரம், பணியிட பாதுகாப்பு, தொடங்கி தங்களுக்கான சங்கம் அமைப்பது வரை என அடிப்படை உரிமைகளை கூட போராடி, அடக்குமுறைகளை எதிர்கொண்டு தான் பெறும் நிலையில் நம் தொழிலாளர்களை வைத்திருக்கிறது இந்த அரசு.
முதலாளிகளின் நலனை மட்டும் சிந்திக்காமல் ஒட்டுமொத்த குடிமக்களின் வளர்ச்சியை விரும்பும் ஒரு மக்கள்நல அரசு அமைந்தாலொழிய இந்த துன்பங்களுக்கெல்லாம் ஒரு முடிவு இல்லை.
உலகின் பெரும் புரட்சிகளையும் , மாற்றங்களையும் நிகழ்த்திக்காட்டியது தொழிலாளர் வர்க்கமே…
அடிப்படை அரசியல் மாற்றத்தை விரும்பும் தொழிலாளர் பெருமக்கள் நினைத்தால் அந்த மாற்றம் தமிழ்நாட்டிலும் நிகழும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.