நாகர்கோவில், ஜூன் 15 –
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று உலக இரத்த கொடையாளர் தின விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் கலந்து கொண்டு, அதிக முறை இரத்தம் தானம் செய்தவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
தொடர்ந்து அவர் கூறியதாவது: உலகம் முழுவதும் ஜூன் 14ம் தேதி உலக இரத்த கொடையாளர் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்தொடர்ச்சியாக இன்று வருடத்திற்கு 3 முறை மற்றும் அதற்கு மேல் இரத்த தானம் வழங்கிய கொடையாளர்களுக்கான பொதுமக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மாணவ மாணவியர்கள் உள்ளிட்டோர் பாராட்டு சான்றிதழ் வழங்குவதில் பெருமை அடைகிறேன். குமரி மாவட்டத்தில் அதிக அளவில் இரத்த கொடையாளர்கள் உள்ளார்கள். குறிப்பாக கல்லூரி மாணவ, மாணவியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பல்வேறு தரப்பட்ட மக்கள் தானாக முன்வந்து இரத்தம் வழங்கி வருகிறார்கள்.
அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணி பெண்களுக்கும் இரத்த சோகையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அறுவை சிகிச்சையின் போதும் அதிக அளவு இரத்தம் தேவைப்படுகிறது. இரத்த வங்கிகளில் தேவையான இரத்தத்தினை இருப்பு வைத்து கொள்ள மருத்துவர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.
அதிக அளவு இரத்தம் தேவைப்படும் நேரங்களில் இரத்த கொடையாளர்கள், தன்னார்வலர்கள், கல்லூரி மாணவ மாணவியர்களிடம் பெற்று உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும். இரத்த கொடையாளர்களும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தொடர்ந்து இரத்தம் வழங்குவதன் மூலம் பல உயிர்களை காப்பாற்ற முடியும். எனவே பொதுமக்கள் தன்னார்வமாக இரத்த தானம் செய்திட முன்வர வேண்டும் என கூறினார்.
நடைபெற்ற விழாவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.லியோ டேவிட், மருத்துவ கண்காணிப்பாளர் மரு.கிங்ஸ்லி ஜெப சிங், துணை முதல்வர் மரு.கீதா ராணி, உறைவிட மருத்துவர் மரு.விஜயலட்சுமி, உதவி உறைவிட மருத்துவர் மரு.ரெனிமோள், மரு.கலைக்குமார், இரத்த வங்கி மருத்துவர் மரு.ராகேஷ், துறை அலுவலர்கள், பொதுமக்கள், இரத்த கொடையாளர்கள், கல்லூரி மாணவ மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



