திருப்பூர், ஏப்.23-
திருப்பூர் மாநகராட்சி 25-வது வார்டுஅதிமுக கவுன்சிலர் தங்கராஜுடன் ரங்கநாதபுரம் பகுதி மக்கள் நேற்று காலை கலெக்டர் கிறிஸ்து ராஜை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் நாங்கள் மேற்கண்ட பகுதியில் 36 வருடத்திற்கும் மேலாக வசித்து வருகிறோம். இங்குள்ள பலருக்கும் வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டுள்ள நிலையில் 26 பேருக்கு இன்னமும் பட்டா கிடைக்க வில்லை. இதுதொடர்பாக கடந்த 2000-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றோம். அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வு செய்வதும், நிலத்தை அளந்து செல்வதுமாக உள்ளது.
ஆனால் இதுவரை பட்டா கிடைக்கவில்லை. பல வருடங்களாகியும் பட்டா வழங்காமல் அதிகாரிகள் இழுத்தடிப்பு செய்து வருகின்றனர். அன்றாடம் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வரும் எங்களுக்கு நிலத்தை வகை மாற்றம் செய்து விரைவில் பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விரைவில் நடவ டிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் உறுதியளித்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.