தருமபுரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் சதீஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். சாலை பணிகள், குடிநீர் திட்ட பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை பார்வையிட்ட அவர் குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் ஒரு பகுதியாக கிருஷ்ணாபுரம் அரசு தொடக்கப்பள்ளியில் ஆட்சியர் சதீஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பள்ளியில் மாணவர்கள் வருகை, அடிப்படை வசதிகள் முறையாக செய்து கொடுக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடி கற்றல் மற்றும் வாசித்தல் திறன் குறித்து கேட்டறிந்தார். அப்போது அவர்களிடம் பாடங்களில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான பதில் அளித்த மாணவ ,மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். அதை யடுத்து தருமபுரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்டு பொதுமக்களின் தகுதியான கோரிக்கை மனுக்கள் மீது காலதாமதத்தை தவிர்த்து உரிய நேரத்தில் நடவடிக்கை மேற்கொண்டு கோரிக்கைகள் நிறைவேற்றிட வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். பின்னர் தருமபுரி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அவர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தனலட்சுமி, சத்யா, ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர் சீனிவாசன் மற்றும் தலைமை ஆசிரியர், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.



