கருங்கல், மார்- 17
கருங்கல் அருகே ஆலஞ்சி சந்திப்பில் சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட்ட உயர் கோபுர மின் விளக்கு ஒன்று உள்ளது. இந்த விளக்கை பாலப்பள்ளம் பேரூராட்சியினர் பராமரித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் உயர் கோபுர மின் விளக்கு எரியவில்லை. இதனை அடுத்து பஞ்சாயத்து ஊழியர்கள் விளக்கை சரி செய்வதற்காக சென்றனர்.
அப்போது உயர் கோபுர மின் விளக்கு அக்கறைக்குள் இருந்த ஐந்து பேட்டரிகளை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் பேட்டரிகளை திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து பாலபள்ளம் பேரூராட்சி தலைவர் டென்னிஸ் கருங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் கருங்கல் போலீசார் விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை சோதனை செய்து பார்த்தபோது, நள்ளிரவில் பைக்கில் வந்த இரண்டு வாலிபர்கள் அருகில் உள்ள கட்டிடத்தின் படிக்கட்டு வழியாக கட்டடத்தின் மேல் மாடியில் நுழைந்து, அதன் அருகில் உள்ள உயர் விளக்கு கோபுரத்தில் பொருத்தப்பட்டு இருந்த ஐந்து பேட்டரிகளை திருடி செல்வதும் தெரிய வந்தது. இந்த கேமரா காட்சி பதிவுகளை வைத்து போலீசார் இருவரையும் தேடி வருகின்றனர்.