ஈரோடு மார்ச் 10
ஈரோடு மாவட்டம் பண்ணாரி மாரியம்மன் கோவில் திருவிழா வருடம் தோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவை யொட்டி நடக்கும் தீ மிதி விழாவில் தமிழ் நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு பகுதிகளில் இருந்தும் மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் குண்டம் இறங்கி தீ மிதிப்பார்கள்.
இந்த வருடம் இந்த குண்டம் திருவிழா அடுத்த மாதம் ஏப்ரல் நடக்க உள்ளது.
அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் குண்டம் திருவிழாவில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதில் காவல்துறை, தீயணைப்புத்துறை, அரசு போக்குவரத்துக் கழகம், வட்டாரப் போக்குவரத்துத்துறை, பொது சுகாதாரத்துறை, மருத்துவத்துறை, சத்தியமங்கலம் நகராட்சி நிர்வாகம், சத்தி ஊராட்சி ஒன்றியம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், உணவு பாதுகாப்புத் துறை, மின்சார வாரியம், வனத்துறை, பொதுப்பணித்துறை, தேசிய நெடுஞ்சாலைத்துறை, உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது மாவட்ட ஆட்சியர் பேசும் போது
பண்ணாரி மாரியம்மன் குண்டம் திருவிழாவினையொட்டி பக்தர்களுக்கு தேவையான குடிநீர் தங்கு தடையின்றி கிடைக்கவும், மேலும் திருக்கோயில் வளாகத்தில் தூய்மை பணியாளர்களை நியமித்து தூய்மை பணிகள் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சத்தி – மைசூர் சாலை மற்றும் பவானிசாகர் பண்ணாரி சாலைகளில்
செல்லும் வாகனங்கள் போக்குவரத்துக்கு நெரிசலின்றி செல்வதை கண்காணிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தற்காலிக தடுப்பு சுவர்களை அமைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். பக்தர்கள் குண்டம் இறங்கும்போது குண்டத்துக்கு அருகில் மருத்துவக்குழு ஒன்று தயார் நிலையில் இருக்க வேண்டும். பக்தர்களுக்கு தேவையான கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்ய வேண்டும். தீயணைப்பு துறையின் மூலம் தீத்தடுப்பு வாகனம் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்துத்துறையின் மூலம் அதிக அளவில் சிறப்பு பேருந்துகளை இயக்கவும், மின்சாரத்துறையின் மூலம் தடையில்லா மின்சாரத்தை வழங்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் சட்டம் ஒழுங்கினை பராமரிக்க வேண்டும். அனைத்து துறையினரும் முன்னேற்பாடு பணிகளை தொய்வின்றி திருவிழா
நடக்க சம்பந்தப்பட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.