அருமனை, மார்- .5
அருமனை அருகே ஆலறவிளையில் அரசு அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த மையத்தில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான குழந்தைகள் படித்து வருகின்றன. இங்கு மருதம்பாறை பகுதியை சேர்ந்த செல்வகுமாரி (44) உட்பட 2 ஆசிரியைகள் பணியில் உள்ளனர். அதே பகுதி சேர்ந்த சஜின் ராஜ் – மோனிஷா தம்பதி மகள் ஷாமிலி என்ற இரண்டரை வயது குழந்தையும் படித்து வருகிறார்.
சிறுமி ஷாமிலியை ஆசிரியை செல்வகுமாரி கம்பால் சரமாரியாக அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் காயங்களுடன் வீட்டுக்கு சென்ற ஷாமிலியை பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த தகவல் தெரிய வந்ததும் ஆத்திரமடைந்த அந்த பகுதி மக்கள் அங்கன்வாடி மையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதை அடுத்து ஆசிரியை செல்வகுமாரி மீதான புகாரின் பேரில் அவரை மூன்று மாதம் சஸ்பெண்ட் செய்து துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கிடையே தனது மகளை ஆசிரியை தாக்கியது குறித்து குழந்தையின் தாய் மோனிஷா அருமனை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் பேரில் சிறுமியை தாக்கிய அங்கன்வாடி ஆசிரியை மீது போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.