தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் தலைமை தாங்கினார். பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள். அப்போது விவசாயிகள் கூறியதாவது. தருமபுரி அருகே உள்ள ஜெகநாதன் கோம்பை தடுப்பணையின் உயரத்தை 5 அடி உயரத்தி ஐந்து ஊராட்சிகளை சேர்ந்த பல்வேறு கிராமங்கள் பாச வசதி பெற ஏற்பாடு செய்ய வேண்டும். தொப்பையாறு அணையில் பெட்ரோலிய கழிவுகள் கலப்பதாக எழுந்துள்ள புகார் குறித்து கூறிய ஆய்வு நடத்தி அதன் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மஞ்சவாடி கணவாய் பகுதியில் சாலை விரிவாக்க பணிகளை விரைவு படுத்த வேண்டும். மொரப்பூர்- சிந்தல் பாடி சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தண்ணீர் தேங்குவதால் போக்குவரத்து பாதிக்கும் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். விவசாய நிலங்களில் காட்டுப்பன்றிகள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும். வெள்ளப்பெருக்கு காலங்களில் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் உபரி நீரை தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளை நிரப்பும் திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும் இவ்வாறு விவசாயிகள் வலியுறுத்தினார்கள். இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் பேசுகையில் விவசாய நிலங்களில் காட்டுப்பன்றிகள் நுழைந்து பயிர் சேதம் ஏற்படுத்துவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
விவசாயிகளின் கோரிக்கை அடிப்படையில் ஏரிகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்படும். மேலும் விவசாயிகள் தெரிவித்த பல்வேறு கோரிக்கைகளை அரசு கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் ரவி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சரவணன் உள்பட அனைத்து துறை அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.



