இரணியல், மார்-1
வில்லுக்குறி பகுதி சேர்ந்தவர் ரமேஷ் குமார் (34). டெம்போ டிரைவர். நேற்று முன்தினம் இரவு குதிரைப்பந்தி விளை மரியமிக்கேல் என்பவர் பெட்டி கடையின் முன்பு பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ராஜகோபால் (38) என்பவர் மது போதையில் மனைவி மற்றும் பிள்ளைகளை அடித்து விரட்டினார். அவர்கள் அலறியபடி ரமேஷ் குமார் பைக் முன் வந்து காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று கூறியுள்ளார்.
இதனால் ரமேஷ்குமார் ஏன் இப்படி தகராறு செய்கிறாய்? என்று கேட்டுள்ளார். அதற்கு அவதூறாக பேசிய ராஜகோபால் என் மனைவி பிள்ளைகள் அடிப்பதை தட்டி கேட்க நீ யார்? என்று கூறி கையில் வைத்திருந்த அரிவாளால் ரமேஷ் குமாரை வெட்டியதாக தெரிகிறது.
இதில் அவருக்கு தலை உட்பட பல்வேறு இடங்களில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. வரியால் துடித்தவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்னர். இது குறித்து ரமேஷ்குமார் இரணியல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் ராஜகோபால் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.