திருவாரூர் பிப்ரவரி 12
திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட கௌரிசாமி நடுநிலைப்பள்ளியில் குடற்புழு நீக்க நாள் முகாமில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வ.மோகனச்சந்திரன், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் ஆகியோர் வழங்கி முகாமினை தொடங்கி வைத்தனர்.
முன்னதாக, குடற்புழு நீக்க முகாமில் தேசிய குடற்புழு நீக்க நாள் உறுதிமொழி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் ஏற்கப்பட்டது.
1 முதல் 19 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மருந்து (அல்பெண்டசோல்) அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள்;, தனியார் பள்ளிகள்;, அங்கன்வாடி மையங்கள், அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் வழங்கப்படுகிறது. இதன் மூலம் குழந்தையின் ஆரோக்கியம் மேம்படுவதுடன் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் நலமாக வாழ்வதற்கும் கல்வித்திறன் அதிகரிக்கவும் உதவுகிறது.
இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்த பொது சுகாதாரம், பள்ளிக்கல்வி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் ஆகிய துறைகளின் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அங்கன்வாடி மையங்களில், 1 – 5 வயதிற்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத குழந்தைகள், 1 – 19 வயதிற்குட்பட்ட பள்ளி செல்லாத குழந்தைகள், பள்ளிகளில் பள்ளி செல்லும் அனைத்து குழந்தைகளுக்கும் (1 முதல் 12 – ஆம் வகுப்பு வரை), கல்லூரிகளில் 19 வயது வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படுகிறது.
1 முதல் 2 வயதுக்குட்பட்டவர்களுக்கு அரை மாத்திரையும், 2 முதல் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஒரு மாத்திரையும் வழங்கப்படும். அல்பெண்டசோல் மாத்திரையை நன்றாக சப்பி சாப்பிட வேண்டும், குழந்தைகள் நோய்வாய்ப்பட்டிருந்தால் மாத்திரை வழங்கப்படமாட்டாது.
இத்திட்டத்தின் மூலம் 1 முதல் 19 வயதுக்குட்பட்ட சுமார் 4,42,574 குழந்தைகள் மற்றும் 20 முதல் 30 வயதிற்குட்பட்ட பெண்களுக்கும் (கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் நீங்கலாக) பயன்பெறுவார்கள்.
குடற்புழு நீக்கத்தினால் குழந்தைகளுக்கு ஏற்படும் நன்மைகளாக, குழந்தைகளுக்கு ஏற்படும் இரத்த சோகையை தடுக்கிறது, அறிவுத்திறன் மற்றும் உடல் வளர்ச்சி மேம்பட்டு ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது. குழந்தைகள் நாள்தோறும் அங்கன்வாடி மையத்திற்கும், பள்ளி மற்றும் கல்லூரிக்கு வருவது அதிகரிக்கிறது. பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கி குழந்தைகளின் ஆரோக்கியத்தினை மேம்படுத்திடலாம். தொடர்ந்து, தேசிய குடற்புழு நீக்க நாள் குறித்து குடற்புழு தொற்றை நீக்குவோம், ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்குவோம்
இம்முகாமில், திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சௌம்யா, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.சங்கீதா, நகர்மன்ற உறுப்பினர் பிரகாஷ், நகராட்சி ஆணையர் தாமோதரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், மருத்துவ பணியாளர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.