குளச்சல், பிப்- 11
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் ஒன்று. கேரளா பெண் பக்தர்கள் இருமுடி கட்டி இங்கு வந்து அம்மனை வழிபடுவதால் இக்கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது.
இங்கு மாசி கொடை விழா 10 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சியுடன் விமர்சையாக நடத்தப்படுவது வழக்கம். இந்த வருடத்தின் மாசி கொடை வரும் மார்ச் மாதம் 2-ஆம் தேதி திரு கொடியேற்றத்துடன் துவங்கி 11 ஆம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
மாசி கொடையை முன்னிட்டு இன்று செவ்வாய்க்கிழமை பந்தல் கால் நாட்டு விழா நடக்கிறது. இதையொட்டி நாளை காலை 4:30 மணிக்கு திருநடை திறக்கப்பட்டது. 5 மணிக்கு பஞ்சாபிஷேகம், 6:30 மணிக்கு தீபாராதனை தொடர்ந்து 7 மணிக்குள் நிறை புத்தரிசி பூஜை, 7:30 மணி முதல் 8 : 30க்குள் பந்தல்கால் நாட்டு விழா நடக்கிறது.
தொடர்ந்து இரவு 8:30 மணிக்கு அத்தழ பூஜை மற்றும் இரவு 9:30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி, 11 மணிக்கு அலங்கார தீபாராதனை ஆகியவை நடக்கிறது.