திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம், மோரை ஊராட்சியில்
கிராம சபை கூட்டம்
நாட்டின் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம், மோரை ஊராட்சியில், குடியரசு தின சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
முன்னதாக, மோரை ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து, அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, வீராபுரம் சமுதாய நலக்கூடத்தில், திருவள்ளூர் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் ஐ.ஜெபக்குமாரி அனி
தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், மக்கள் திட்டமிடல் இயக்கம் மூலம் 2025 – 2026 ஆம் நிதி ஆண்டுக்கான கிராம வளர்ச்சி திட்டத்திற்கு ஒப்புதல் பெறுதல் சம்பந்தமாகவும், கிராம ஊராட்சி வளர்ச்சியின் அவசியத்தை கருத்தில் கொண்டு, வளர்ச்சிக்காக கிராம மக்களால் கொண்டுவரப்படும் சிறப்பு தீர்மானங்களையும் ஆலோசித்து, விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த கிராம சபை கூட்டம் நிகழ்வில், வட்டார வளர்ச்சி அலுவலர் வேதநாயகி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மல்லிகா, கிராம நிர்வாக அலுவலர் தியாகராஜன் மற்றும் மருத்துவத்துறை, தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத்தின் அலுவலர்கள் மற்றும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டு பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.
இந்த நிகழ்வில், மேனாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.திவாகரன் மற்றும் ஊர் பொதுமக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பொது நல சங்க நிர்வாகிகள், வியாபாரி சங்க நிர்வாகிகள், இளைஞர்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுவினர் கலந்து கொண்டனர். கிராம சபை கூட்ட நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மோரை ஊராட்சியின், ஊராட்சி செயலாளர் வீரபத்திரன் சிறப்பாக செய்திருந்தார்.