கன்னியாகுமரி ஜன 26
கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டம் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பாக கல்குளம் வட்ட வழங்கல் அலுவலகத்தில் வைத்து வட்ட வழங்கல் அலுவலர் சுனில் குமார் தலைமையில் பொது விநியோக திட்டம் மக்கள் குறை தீர்க்கும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குடும்ப அட்டைகளில் உள்ள கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு கண்டனர். குறிப்பாக குடும்ப அட்டைகளில் தொலைபேசி எண் பதிவேற்றம் செய்தல், பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல், முகவரி மாற்றம் செய்தல், இறந்து போன நபர்களின் பெயர்கள் நீக்கம் செய்து புகைப்படம் மாற்றம் செய்தல், குடும்ப அட்டைகளில் உள்ள பிழைகள் திருத்தம் செய்தல், குடும்ப தலைவர் மாற்றம் மற்றும் புகைப்படம் பதிவேற்றம் செய்தல், நகல் குடும்ப அட்டை வழங்குதல், நியாய விலை கடைக்கு நடந்து சென்று பொருட்கள் வாங்க முடியாத முதியவர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகள் மட்டும் உள்ள குடும்ப அட்டைகளுக்கு ரேசன் பொருட்கள் தடங்கல் இன்றி பெறும் வகையில் அங்கீகார சான்று வழங்குதல் உள்ளிட்ட பொதுமக்களின் பலவகையான கோரிக்கைகள் அனைத்திற்கும் ஒரே இடத்தில் உடனுக்குடன் தீர்வு காணப்பட்டது. மேலும் புதிய குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்துள்ளவர்களின் விண்ணப்பங்கள் மற்றும் குடும்ப அட்டை வகைப்பாடு மாற்றம் செய்து முன்னுரிமை குடும்ப அட்டை கோரிய விண்ணப்பங்கள் அனைத்தும் கள விசாரணைக்கு வட்ட வழங்கல் அலுவலரால் பரிந்துரை செய்யப்பட்டது.