நாகர்கோவில் ஜன 20
குமரி மாவட்டதில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மாவட்ட காவல்துறையால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் இரவு 11 மணிக்கு மேல் டீக்கடைகள் செயல்பட கூடாது என கூறப்பட்டது. சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதே சமயம் பேருந்து நிலையங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் இரவு நேரம் கடைகள் செயல்பட தடை விதிக்கப்படவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் வியாபாரிகள் சங்கத்தினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தித்து கோரிக்கை வைத்ததின் பேரில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமலும், கூட்டம் கூடாமலும் தொடர்ந்து இரவு நேர டீக்கடைகள் செயல்படலாம் என தெரிவித்து அனுமதி வழங்கப்பட்டது.
இரவு 11 மணிக்கு மேல் ஏன் டீ கடைகள் இயங்க கூடாது என காவல்துறை தடை விதிக்க காரணம் என்ன? சாமானிய பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் தின தமிழ் நாளிதழ் விளக்கம் உங்கள் பார்வைக்கு :-
சுமார் 25 வருடங்களுக்கு முன்பு டீக்கடைகளில் அதிக அளவில் வயதானவர்கள் மட்டுமே அமர்ந்து அரட்டை அடித்து வந்தனர். இவர்கள் தாங்கள் செய்து வரும் விவசாயம், அலுவலகப் பணி மற்றும் பல பணிகளை முடித்துவிட்டு வந்து அமர்ந்திருந்தனர்.( அவர்களின் அரட்டை பெரும்பாலும் அரசியல், விவசாயம், பொதுமக்கள் நலன், நட்பு மற்றும் முன்னேற்றம் குறித்ததாக இருந்தது )
ஆனால் நவீன காலத்திற்குள் மனிதர்கள் செல்ல செல்ல 25 ஆண்டுகளுக்கு முன்பு டீக்கடையில் அமர்ந்திருந்த பெரியவர்கள் முதியோர் பராமரிப்பு இல்லத்திற்கு மாற்றப்பட்டு அவர்கள் அமர்ந்திருந்து சமுதாய சிந்தனைகளை பேசி வந்த டீக்கடைகளில் இளைய தலைமுறையினர் வேலைக்கு செல்லாமல், போதைப் பொருட்களுக்கு அடிமையாகி தங்களுடைய பொன்னான நேரத்தை வீணாக்கி வருகின்றனர். பண்டைய காலங்களில் வயதான பெரியவர்கள் மட்டுமே புகை பிடித்து வந்தனர். அவர்கள் தங்கள் வயதிற்கும் மூத்தவர்கள் வரும்போது தாங்கள் பிடித்துக் கொண்டிருக்கும் பீடியை மறைத்து வைத்து ஒளித்து பிடித்தனர்.
நவ நாகரிக காலத்திற்குள் அடியெடுத்து வைத்திருக்கும் இளைஞர்கள் சிறியவர் பெரியவர் என வித்தியாசம் பார்க்காமல் அனைவரும் முன்பாகவும் ஸ்டைலாக புகைப்பிடித்து வருகின்றனர். இதற்காக அவர்கள் தேர்வு செய்த இடம் டீ கடை . இதனால் அழிந்தது பாரம்பரியம், மரியாதை, இளைஞர்களின் வாழ்க்கை போன்றவைகள் ஆகும்.
மேலும் முன்பு இரவு எட்டு மணி வரை மட்டுமே செயல்பட்டு வந்தது ( அதிக நேரமாக இரவு 12 மணி வரை பேருந்து நிலையங்களில் மட்டுமே டீக்கடை செயல்பட்டு வந்தது ) தற்போது இளைஞர்களின் ஆதிக்கத்தால் 24 மணி நேரமும் டீக்கடைகள் செயல்பட தொடங்கியுள்ளது. இந்த நவீன காலத்தில் காலை மதியம் இரவு என மூன்று வேளையும் உணவுகளை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து சாப்பிட்டுவிட்டு டீக்கடையில் மட்டும் ஏன் வந்து அமர்ந்திருக்கிறார்கள் என ஒரு சந்தேகம் அனைத்து தரப்பினருக்குள்ளும் எழுந்து வருகிறது. அதேபோல் குமரி மாவட்டத்தை பொருத்தமட்டில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பாக குற்றங்கள் என்பது மிகக் குறைவாகவே நடைபெற்றது. ஆனால் தற்போது போதை பழக்க வழக்கங்கள் அதிகமாகி தினந்தோறும் குற்ற சம்பவங்கள் நடைபெறுவது வழக்கமாகிவிட்டது. இதைக் கட்டுப்படுத்த காவல்துறையும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பள்ளி, கல்லூரி மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம் போன்ற இடங்களில் மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதனால் குற்றங்கள் சற்று குறைந்தாலும், போதை பொருட்களின் நடமாட்டம் குறைந்த பாடில்லை. காவல் நிலையங்களிலும் பதியப்படும் வழக்குகளில் 99 சதமானம் போதையினால் உண்டாகும் வழக்குகளே ஆகும். எனவேதான் குமரி மாவட்டத்தில் புதிதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக்கொண்ட மருத்துவர். ஸ்டாலின் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும், குற்ற சம்பவங்களை தடுக்கும் நோக்கில் இரவு 11 மணிக்கு மேல் டீக்கடைகள் இயங்க கூடாது என உத்தரவு பிறப்பித்திருந்தார். இவருடைய இந்த உத்தரவால் பல ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர். ஆனால் இளைஞர்களை போதைப் பொருள்களுக்கு எதிராக திசை திருப்பும் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால் காவல்துறை தன்னுடைய கடமையை( பொதுமக்களை பாதுகாக்கும் பணியை) சரிவர செய்ய முடியவில்லை.
குமரி மாவட்டத்தில் குற்றங்கள், குற்ற சம்பவங்கள், போதைப் பொருள்கள், போதைப் பொருட்களின் நடமாட்டங்கள் போன்றவற்றை அடியோடு தடுத்து நிறுத்திட காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்களின் நடவடிக்கைக்கு பொதுமக்கள், வியாபாரிகள் போன்றவர்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே காவல்துறையால் சுதந்திரமாக செயல்பட்டு குற்றங்களை கட்டுப்படுத்தி குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் இரவு 11 மணிக்கு டீக்கடைகளை மூட வேண்டும் என்ற வேண்டுகோள் நமக்காகவும், நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும், நம் வீட்டுப் பிள்ளைகளுக்கும் பாதுகாப்பிற்காகவும் மட்டுமே என்பதை பொதுமக்கள் தெளிவுடன் புரிந்து கொள்ள வேண்டும். அதேபோல் வியாபாரிகள் நலனிலும் காவல்துறை அதிக அக்கறை கொண்டுள்ளது என்பதை வியாபார பெருமக்கள் உணர்ந்து காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே கல்வியறிவு பெற்ற குமரி மக்களின் சிறப்பு மற்ற மாவட்டங்களுக்கும் முன்மாதிரியாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை
24 மணி நேரமும் விழிப்புடன் இருந்து நம்மை பாதுகாக்கும் காவல்துறையினர் எடுக்கும் முடிவு ஆரம்பத்தில் கசப்பாக தெரிந்தாலும் இறுதியில் நமக்கும் நம்மை சுற்றி உள்ளவர்களுக்கும் இனிப்பாகவே அமையும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.
நன்றி
தின தமிழ் ஆசிரியர்