மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தென் மாவட்டங்கள் மட்டுமன்றி, கரூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்கள், கேரளம் உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும் நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். தமிழகத்தில் உடல் உறுப்புகள் தானம் செய்வதிலும் அரசு ராஜாஜி மருத்துவமனை முன்னிலை வகித்து வருகிறது. இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகிகள் கூறியதாவது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த ஆண்டு விபத்தில் மூளைச்சாவு அடைந்த 13 பேரிடம் இருந்து இதயம், சிறுநீரகம், கல்லீரல், கண்கள், எலும்பு, தோல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டன. இந்த உடல் உறுப்புகள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மட்டுமன்றி, சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசு, தனியார் மருத்துவ மனைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம் 50 க்கும் மேற்பட்ட நோயாளிகள் மறுவாழ்வு பெற்றுள்ளனர். இதேபோல், மருத்துவப் படிப்பு பயிலும் மாணவர்களின் உடல் கூறு கல்வி பயன்பாட்டுக்காக உடல்கள் மிகவும் அத்தியாவசியமாக உள்ளன. எனவே, உறவினர்கள் எவரும் இல்லாத நிலையில் உயிரிழந்தவர்களின் உடல்கள், உறவினர்கள் தாங்களாக முன்வந்து உடலை தானமாக வழங்குவது என கடந்த ஓராண்டில் கிட்டத்தட்ட 65 உடல்கள் தானமாகப் பெறப்பட்டு, மதுரை அரசு மருத்துவக் கல்லூரிக்கு வழங்கப்பட்டன.



