நாகர்கோவில் ஜன 4
கன்னியாகுமரி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தோவாளை வட்டத்திற்குட்பட்ட கரையான்குழி பகுதியில் 6வது சுற்று கால்நோய் வாய்நோய் தடுப்பூசி போடும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா நேற்று துவக்கி வைத்து தெரிவிக்கையில்-
கால்நோய் வாய்நோய் பிளவுப்பட்ட குளம்புள்ள கால்நடை இனங்களான பசு மற்றும் எருமைகளுக்கு பரவும் நோயாகும். இந்நோய் தாக்கப்படும் கால்நடைகளுக்கு கால்,வாய் மற்றும் மடிக்காம்புகளில் கொப்பளங்கள் ஏற்படும். இதனால் நோய் தாக்கப்பட்ட கால்நடைகளில் பால் உற்பத்தி குறைந்து பொருளாதார இழப்பு ஏற்படும். நோய்தாக்கப்பட்ட பசுக்களில் பால் அருந்தும் கன்றுகள் இறக்கநேரிடும். இந்த நோயிலிருந்து கால்நடைகளை காத்திட தடுப்பூசி போடுவது ஒன்றே சிறந்த வழியாகும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை ஐந்து சுற்று கால்நோய் வாய்நோய் தடுப்பூசி பணி நடந்துள்ளது. எதிர்வரும் 6வது சுற்றில் சுமார் 58,700 கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டிட இலக்கு நிர்ணயித்து கால்நடை பராமரிப்புத்துறை செயல்திட்டம் வகுத்துள்ளது. இதற்காக நமது மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள கால்டை பராமரிப்புதுறையை சார்ந்த கால்நடை உதவி மருத்துவர்கள். கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் ஆகியோர்களை கொண்ட 52 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. முகாமானது 3-ம் தேதி துவங்கி 28 நாட்கள் நடைபெற உள்ளது. நேற்று நடந்த துவக்க முகாமில், பீமநகரி ஊராட்சியில் உள்ள கரையான்குழி கிராமத்தில் 100 மாடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
கால்நடை வளர்க்கும் விவசாயிகள் கால் மற்றும் வாய் நோயினால் தங்களுக்கு ஏற்படும் உற்பத்தி இழப்பை தடுத்திட இவ்வாய்ப்பினை பயன்படுத்தி, தங்களிடம் உள்ள நான்குமாத வயதிற்கு மேலான அனைத்து பசு மற்றும் எருமைகளுக்கு தடுப்பூசி போட்டிட கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நடைபெற்ற நிகழ்சியில் மண்டல இணை இயக்குநர் கால்நடை பராமரிப்புத்துறை மரு.இராதாகிருஷ்ணன், கோட்ட உதவி இயக்குநர் டாக்டர்.கிருஷ்ணசாமி, நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் டாக்டர்.சுப்ரமணியன், டாக்டர்.ரமேஷ், கால்நடை மருத்துவர்கள் சஜயன், ஜெபகிலாரி, விதுலா, சுபா, ஹரிகரன், கவின்கிஷோர், ஊராட்சி தலைவர் சஜிதா சுப்ரமணியன், கால்நடை ஆய்வாளர்கள், அலுவலர்கள், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.