நாகர்கோவில் நவ 23
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் நடைபெற்ற பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி தலைமையாசிரியருக்கான காலாண்டு தேர்வு மதிப்பெண் சார்ந்த மீளாய்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா அரசு சிறார் இதழ்களில் பங்களித்த அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி தெரிவிக்கையில்-
தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலுக்கிணங்க, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அரசு பள்ளி மாணவர்களும் தனியார் பள்ளி மாணவர்களை போன்று தனித்துவமாகவும். தனித்திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டுமென்ற நோக்கத்தில் பல்வேறு ஆக்கப்பூர்வமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையானது, மாணவர்களுக்கு, ஊஞ்சல் (4-5 வகுப்புகள்) மற்றும் தேன்சிட்டு (6-9 வகுப்புகள்) ஆகிய இரு சிறார் இதழ்களை வெளியிடுகிறது. இவ்விதழ்கள் மாணவர்களின் படைப்பாற்றலை வளர்ப்பதற்கும். பல்வேறு பள்ளி அளவிலான செயல்பாடுகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்துவதற்குமான ஒரு களத்தை வழங்குகிறது. குழந்தைகள் தங்கள் பாடப்புத்தகத்திற்கு வெளியே உள்ள பல்வேறு தகவல்களை அறிந்து, படைப்பாற்றல்களை வளர்க்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் தகவல் தரும் கட்டுரைகள், நீதி வழங்கும் கதைகள், மற்றும் வண்ணமயமான படங்கள் ஆகியவை அடங்கும். மாதம் இருமுறை வரும் இச்சிறார் இதழ்களில் மாணவர்கள் விரும்பும் வகையில், இயற்கையை நேசி, மகிழ்ச்சி அரங்கம், நூல்கள் அறிமுகம், பெரியோரின் பாதையிலே, அறிவோம் ஆயிரம், இனிக்கும் தமிழ், வரலாற்றில் இன்று, இப்படித்தான் இயங்குகிறது முதலான தலைப்புகளுடன் மாணவர் படைப்புகளாலேயே தயாரிக்கப்பட்டு அனைத்து அரசு பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்ட அரசு பள்ளிகளுக்கு வழங்கப்படும் ஊஞ்சல், தேன்சிட்டு ஆகிய சிறார் இதழ்களில் 2023-2024 ம் கல்வியாண்டில் படைப்புகள் வர பங்களித்த நம்முடைய அரசு பள்ளிகளைச் சார்ந்த 23 மாணவர்களின் படைப்புகள் கடந்த கல்வியாண்டு இதழ்களில் பிரசுக்கப்பட்டது. சிறார் இதழ்களில் படைப்புகள் வர பங்களித்த அரசுப் பள்ளியை சேர்ந்த 23 மாணவ மாணவிகளை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தனித்திறமைகளை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். இதுபோன்று ஊக்கப்படுத்தும் போது அரசு பள்ளி மாணவர்களும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஈடாக சிறந்த மாணவர்களாக உருவாகுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, உயர்நிலை. மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியகள். ஆசிரியர்கள். மாவட்ட இதழ் ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் ரேகா, சாரதா, மாணவ மாணவியர்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.