தொண்டி பேரூராட்சியில் 14 வது வார்டில் அடிப்படை வசதிகளை செய்து தராத நிர்வாகத்தை கண்டித்து மமக கவுன்சிலர் வெளிநடப்பு
கலெக்டர் எம்எல்ஏ கண்டு கொள்ள வேண்டும் கவுன்சிலர் சமீமா பானு ஆவேசம்!
ராமநாதபுரம், அக்.10-
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பேரூராட்சியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர பலமுறை குரல் கொடுத்தும் கோரிக்கை மனு வழங்கியும் நிறைவேற்றாதவை கண்டித்து 14 வது வார்டு மமக கவுன்சிலர் சமீமா பானு பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தார்.
கூட்டத்தில் வெளிநடப்பு செய்து வெளியே வந்த கவுன்சிலர் சமீமா பானு செய்தியாளர்களிடம் கூறியதாவது;
தொண்டி பேரூராட்சி 14வது வார்டில் தெற்கு தோப்பு தெருவில் இஸ்லாமிக் மாதிரி பள்ளி ரேடியோ ஸ்டேஷன் வரை உள்ள வாறுகாலில் பலமுறை வாகனங்கள், ஆடு ,மாடுகள் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் தவறி விழுந்து காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. பாதுகாப்பு இல்லாத இந்த வாறுகாலில் மூடி போட்டு தருமாறு பலமுறை கோரிக்கை வைத்தும் செவி சாய்க்கவில்லை.
மேலும் 14 வது வார்டில் பல்வேறு வீதிகள் இருக்கின்றன அனைத்து வீதிகளுக்கும் தெற்கு தோப்பு என பொதுவாக இருக்கின்றது. இதனால் கடிதங்கள் முகவரி தேடி அலையக் கூடியவர்கள் மிகுந்த கஷ்டப்படுகிறார்கள். நான் கவுன்சிலர் ஆக பதவி ஏற்றதிலிருந்து இன்று வரை தொடர்ந்து கோரிக்கை வைக்கின்றேன். 14 வது வார்டுக்கு உட்பட்ட அனைத்து வீதிகளுக்கும் ஒன்றாவது வீதி இரண்டாவது வீதி என வரிசை படுத்தி தர ஆவண செய்யுமாறு கேட்டும் இதுவரை எந்த முயற்சியும் தொண்டி பேரூராட்சி எடுக்கவில்லை.
14வது வார்டில் பெரும்பான்மையான சாலைகள் மண் சாலையாக இருக்கிறது வாறுகால்கள் இல்லை . வாறுகால் இல்லாத காரணத்தால் சாலைகளில் கழிவு நீர் ஓடி தொற்று நோய் பரப்பும் கேந்திரமாக மாறிவிட்டது.
14 வது வார்டில் குழந்தைகளுடைய நலன் கருதி அங்கன்வாடி மையம் தொண்டி பெண்கள் மேல்நிலைப்பள்ளி பின்புறம் உள்ள இடத்தில் அவசியம் கொண்டு வருவதற்கு உண்டான ஏற்பாடுகளை செய்யச் சொல்லி தீர்மானம் நிறைவேற்றக்கோரி கொடுத்தும் இதுவரை செவி சாய்க்கவில்லை .
ஏற்கனவே செயல்பட்டு வந்த வாரச்சந்தை மீண்டும் இயங்க வேண்டும் என்ற கோரிக்கையும் கிடப்பில் உள்ளது.
குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படவில்லை.
சுற்றி திரியும் மாடுகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மாட்டு உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து மாடுகள் சுற்றி திரிவதை கட்டுபடுத்த கோரியதும் கிடப்பில் உள்ளது. அரசு பள்ளியில் பாதுகாப்பு கருதி சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வில்லை.
தொண்டி பேரூராட்சியில் நடைபெறும் அவலங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் தெரிந்து கொள்ளவும் தற்போது நான் வெளிநடப்பு செய்து உள்ளேன்,
இவ்வாறு கூறினார்.



