விளாத்திகுளம், ஜனவரி 26 –
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பிரேமலதா விஜயகாந்த் பரப்புரை மேற்கொண்டார். விளாத்திகுளம் ஆற்றுப்பாலத்தில் இருந்து நடைபெற்ற கேப்டன் ரத யாத்திரைவுடன் தொண்டர்களுடன் பஸ் நிலையம் வரை பிரேமலதா விஜயகாந்த் ஊர்வலமாக வந்தார்.
இதனை தொடர்ந்து அவர் பேசுகையில்: இன்றைக்கு ரதசப்தமி நாள். ரதசப்தமி என்றால் எல்லா அரசியல்வாதிகளுக்கும் சூரியனார் அருள் புரியும் நாள். தேமுதிக கட்சி கொடியை பூஜை செய்து கொடுத்த நாள் தான் ரதசப்தமி. விளாத்திகுளம் பகுதியில் விவசாயிகள் விளைவிக்கும் விவசாய பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காத நிலை உள்ளது. 2026 தேர்தலுக்குப் பின்பு நிச்சயமாக நாம் முன்னிருந்து அதை செய்வோம். நாம் வெற்றி பெற்றதும் மக்களுக்கு அனைத்து தேவைகளையும் செய்து தருவோம். கிராமங்களுக்கு தேவையான சாலை வசதி ரேஷன் கடை வசதி அமைத்து இந்த விளாத்திகுளம் தொகுதியை மாற்றுவோம்.
கேப்டனும் நானும் விவசாயக் குடும்பத்தில் இருந்து தான் வந்திருக்கிறோம். பெருமையோடு சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். விவசாயிகள் நன்றாக இருந்தால் தான் இந்த நாடு நன்றாக இருக்கும். யாரோடு கூட்டணி என்று நீங்கள் எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா?ஒன்னும் கவலைப் படாதீர்கள். கிருஷ்ணகிரியில் விஜய பிரபாகரன் பேசியதை நீங்கள் பார்த்தீர்களா? நீங்கள் முதல்வராக உட்கார உங்களுக்காக நாங்கள் உழைக்கிறோம்.
அப்போ அதிமுக, திமுக புரிஞ்சுக்கோங்க. எங்களுக்குரிய மரியாதை மற்றும் சீட்டுகளை யார் தருகிறார்களோ அவர்களோடு தான் கூட்டணி. நீங்க மட்டும் 170 இடங்களில் போட்டி போடுவோம் தனித்து பெரும்பான்மை காண்போம் என்று சொல்கிறீர்கள். அப்போ தேமுதிகவிற்கும் கேட்க உரிமை இருக்கிறது. நீங்கள் முதல்வராக ஆட்சி அமைக்க வேண்டும் என்று நினைத்தால் தேமுதிகவிற்கு உரிய மரியாதையை தொகுதிகளில் தர வேண்டும். 2011ல் 41 தொகுதி கொடுத்தார்கள். 29 இடங்களில் வெற்றி பெற்றோம். 2026 தேர்தல் உங்களுக்கான தேர்தல். தேமுதிகவிற்கான தேர்தல். உங்களுக்கு 160, 170 சீட்டு என்று சொல்லும் உரிமை இருந்தால் தேமுதிகவிற்கு உரிய அதிகாரமும், சீட் வழங்க வேண்டியது உங்கள் கடமை என்பதை இந்த நேரத்தில் சொல்கிறேன்.
சட்டமன்ற தேர்தல் முடிந்த மூன்றே மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல் வர உள்ளது. என் கண் முன்னாடி நிற்கும் நீங்கள்தான் கவுன்சிலர்கள், துணைத் தலைவர்கள், நகர் மன்ற தலைவர்கள். நாளைய மேயர்கள், தேமுதிக தொண்டர்களை அரசு பதவியில் வைத்து அழகு பார்ப்பது தான் உங்கள் அண்ணியாக உங்கள் அம்மாவாக நான் சொல்கிறேன் எனது கனவு லட்சியம் அதுதான். 2026ல் அதை வென்றெடுப்போம். விரைவில் நல்ல கூட்டணி அமைத்து அதனை தலைமைக் கழகத்தில் அறிவிப்பேன். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை. கூட்டணியில் அவசரப்படக்கூடாது. இதுவரை சத்திரியனாக வாழ்ந்து விட்டோம். இனி சாணக்கியனாக வாழ்வோம். கட்டாயமாக இந்த முறை நீங்கள் விரும்பும் கூட்டணியைத் தான் நான் அமைப்பேன் என்றார். கூட்டத்தின் முடிவில் பிரேமலதா விஜயகாந்த்திற்கு நிர்வாகிகள் பரிசாக வாள் வழங்கினர்.
இந்நிகழ்வில் மண்டல செயலாளர் சந்திரன், வடக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ், விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர் தங்கச்சாமி உள்ளிட்ட ஏராளமான தேமுதிக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.



