கன்னியாகுமரி அக் 6
குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள் சார்பிலும் கிராம மக்கள் குறை தீர்ப்பு விழிப்புணர்வு கூட்டம் நடத்த மாவட்ட எஸ்.பி.சுந்தரவதனம் உத்தரவிட்டிருந்தார். அதன்படி அஞ்சுகிராமம் காவல் நிலையம் சார்பில் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமங்களில் திருட்டு, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிராம மக்கள் குறை தீர்ப்பு மற்றும் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் மயிலாடி பேரூராட்சிக்கு உட்பட்ட லெட்சுமிபுரத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அஞ்சுகிராமம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் லிபிபால்ராஜ் தலைமை தாங்கினார். லெட்சுமிபுரம் ஊர் தலைவர் கவுன்சிலர் ஆர்.என்.பாபு முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் லிபிபால்ராஜ் பேசியதாவது: ஒவ்வொரு குடும்பத்திலும் கணவன் மனைவி, மாமியார் மருமகள் உள்ளிட்ட குடும்ப பிரச்சனைகளை பெரிதுபடுத்தாமல் பெரியவர்கள் முன்னிலையில் பேசி சுமுகமாக தீர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் சிறு குழந்தைகளுக்கான பாலியல் குற்றங்கள் ஏற்படாமல் இருக்க குழந்தைகளை தேவை இன்றி வெளியே அனுப்பக்கூடாது. அவர்களை மிக கவனமாக கையாள வேண்டும்.
நமது குழந்தைகளிடம் செல்போன்களை கொடுப்பது அவர்களை தவறான வழிகளுக்கு செல்ல தூண்டுவதாகும். எனவே குழந்தைகளிடம் செல்போன் கொடுப்பதை அனைவரும் தவிர்க்க வேண்டும். குழந்தைகளை அன்பாகவும் பாசமாகவும் வளருங்கள் ஆனால் அதே நேரத்தில் அவர்களை கண்டித்து வளர்க்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் வருங்காலத்தில் தவறான பாதைகள் மட்டும் குற்றச் செயல்களில் ஈடுபட மாட்டார்கள் நாம் வளர்க்கும் விதத்தில் தான் அவர்களுடைய வருங்காலம் சிறப்பாக அமையும்.
நாம் ஒவ்வொருவரும் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் அன்பாகவும் நேசமாகவும் பழக வேண்டும் மேலும் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து நமது பகுதிகளில் உள்ள ஏழை எளியவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும். ஏழைகளுக்கு செய்வது இறைவனுக்கு செய்யும் தொண்டு ஆகும்.
இந்தப் பகுதிகளில் கஞ்சா, புகையிலை உள்ளிட்ட போதை வஸ்துக்கள் நடமாட்டம் இருந்தாலும், விற்பனை செய்வது சம்பந்தமாக தகவல் தெரிந்தாலும், வெளி நபர்கள் நடமாட்டம் இருந்தாலும் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் தேவையற்ற திருட்டு, வழிப்பறி போன்ற பயங்கரவாத குற்றங்களை தவிர்க்கமுடியும். அதேபோல் முக்கிய தெருக்கள், வீடுகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது நல்லது. இதன்மூலம் அசம்பாவித சம்பவங்களை தடுப்பதுடன் எளிதில் குற்றவாளிகளை அடையாளம் முடியும்.
எனவே பொதுமக்கள் எதற்கும் அச்சப்படாமல் சந்தேகங்களை காவல்துறையிடம் கேட்டு தெரிந்து கொள்வது நல்லது. நாங்களும் உங்களைப் போன்ற சராசரி மனிதர்கள் தான். காவல்துறை பொதுமக்களின் நண்பன். அதே போல் நீங்களும் காவல் துறைக்கு தகுந்த ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். நாங்கள் உங்களுக்கு சேவையாற்ற தான் உள்ளோம், என்பதை நீங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.