நாகர்கோவில் ஆக 18
சகாயநகர் ஊராட்சி, குமரன்புதூர் – திருநங்கை காலனியில் நடைபெற்ற அருள்மிகு ஸ்ரீ இருக்கண்குடி மாரியம்மன், அருள்மிகு இசக்கியம்மன் திருக்கோயில் கொடைவிழா மிக சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் காலை கணபதி ஹோமம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நையாண்டி மேளம், கருங்கொம்பு தப்பட்டை மேளம், செண்டை மேளம் போன்றவற்றுடன், தீர்த்தம் மற்றும் பால்குடத்துடன் திருநங்கைகள் ஊர்வலமாக வந்தனர். இதைத் தொடர்ந்து வில்லிசையும் பின்னர் இத்திருக்கோயிலில் மஹா அபிஷேகமும், தீபாரதனையும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சியும், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர் நையாண்டி மேளமும், குலசேகரன்புதூர் மருதாணி இசக்கியம்மன் கோவிலிருந்து மேளதாளத்துடன், திருநங்கைகள் அக்னிசட்டி ஏந்தி, முளைப்பாரி எடுத்து, பூங்கரகம் பவனி நிகழ்ச்சி நடைபெற்றது. இக்கொடை விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து, சிறப்பு வழிபாடு நடத்தினார்.
கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருடன், தோவாளை ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் சாந்தினிபகவதியப்பன், ஆரல்வாய்மொழி பேரூராட்சித் தலைவர் முத்துக்குமார் ஆகியோர் உடன் சென்றிருந்தனர். இவர்களை குமரன்புதூர் – திருநங்கை காலனி தலைவி லவ்லி நாயக், சீமா நாயக், சுபிக்ஷா நாயக், சோனியா நாயக் ஆகியோர் வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு அலங்கார தீபாராதனை, அன்னப்படைப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



