வடக்கே வடகாசி என்றால் தெற்கே தென்காசி என்பார்கள். இந்த வரலாற்று சிறப்புமிக்க ஊரில் பிரசித்தி பெற்றதும் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததுமான காசி விசுவநாதர் ஆலயம் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு மஹா கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் கோரிக்கை விடுத்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில் கோபுரம் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சுவாமி அம்பாள் ஆலயம் முன்பு பழுதடைந்த நிலையில் உள்ள கொடிமரத்தை மாற்ற முடிவு செய்யப்பட்டது. சுவாமி சன்னதியில் 43 அடி உயரத்திலும், உலகம்மன் சன்னதியில் 37 அடி உயரத்திலும் கொடிமரம் வைக்க முடிவு செய்யப்பட்டு நன்கொடையாளர்கள் மூலம் கொடிக்கம்பங்கள் பெறப்பட்டது. பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மரக்கம்பங்கள் ஆஸ்திரேலியா நாட்டிற்கு அருகே உள்ள பப்புவா நியூ கினி என்ற தீவில் வணிமூவ் என்ற பகுதியில் இருந்து கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகம் வழியாக நன்கொடையாளர்கள் அழகர்ராஜா, சுரேஷ் ராஜா மூலம் தென்காசி ஆலயத்திற்கு கொண்டு வரப்பட்டது. கொண்டு வரப்பட்ட கொடிக்கம்பத்திற்கு பூஜைகள் செய்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆலயத்திற்குள் எடுத்து சென்றனர். ஆலயத்திற்குள் கொண்டு வரப்பட்ட கொடிக்கம்பத்தை பக்தர்கள் தொட்டு வணங்கி சென்றனர்.



