நாகர்கோவில் ஆக 5
ஆரல்வாய்மொழி தேர்வு நிலை பேரூராட்சியில், ஆரல்வாய்மொழி தெற்கு கிராமத்தில் 60 டன் கொள்திறன் கொண்ட எலக்ட்ரானிக் எடை மேடை அமைப்பதற்கு கன்னியாகுமரி மாவட்ட கனிம அறக்கட்டளை நிதியிலிருந்து ரூ. 13 இலட்சத்து 80 ஆயிரம் திட்டநிதி கோரப்பட்டது. இதனடிப்படையில் மாவட்ட ஆட்சியர் இதனை ஏற்று 60 டன் கொள்திறன் கொண்ட எலக்ட்ரானிக் எடை மேடை அமைப்பதற்கு ரூ. 13 இலட்சத்து 80 ஆயிரத்திற்கான நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு இதற்கான காசோலை ஆரல்வாய்மொழி தேர்வு நிலை பேரூராட்சிக்கு வழங்கப்பட்டது. இதனடிப்படையில் மேற்கண்ட பணிகள் நிறைவேற்றப்பட்டு இதற்கான அறிக்கையும் மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டது.
இந்த எடை மேடையினை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்கும், தொடர்ந்து கண்காணிப்பதற்கும் அதற்குண்டான மின்சார செலவு, ஊழியர்களை நியமித்து அதற்கான ஊதியம், எடை மேடைக்கான பராமரிப்பு செலவு ஆகியவற்றை நடைமுறை படுத்திடவும் ஆரல்வாய்மொழி தேர்வு நிலை பேரூராட்சி செயல் அலுவலருக்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கி இருந்தார்.
எனவே ஆரல்வாய்மொழி தேர்வு நிலை பேரூராட்சித் தலைவர் முத்துக்குமார், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய்சுந்தரத்திற்கு எடை மேடையை திறந்து வைக்க அழைப்பு விடுத்திருந்தார். இதனை ஏற்று தளவாய்சுந்தரம் ஆரல்வாய்மொழி தேர்வு நிலை பேரூராட்சித் தலைவர் முத்துக்குமார் தலைமையில் நடைபெற்ற இதற்கான விழாவில் ஆரல்வாய்மொழி தெற்கு கிராமத்தில் 60 டன் கொள்திறன் கொண்ட எலக்ட்ரானிக் எடை மேடையை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி பேசும் போது அவர் கூறியதாவது:-
மக்களின் நீண்டநாள் எதிர்பார்ப்புகள் இதன் மூலம் நிறைவேற்றப் பட்டுள்ளது. எடை மேடை நிலையங்கள் எவ்வித புகார்களுக்கும் இடமில்லாமல் சிறப்புடன் செயல்பட வேண்டும். பணியாளர்கள் தங்களின் பொறுப்புகளை உணர்ந்து கடமை உணர்வோடு செயல்பட வேண்டும் என அவர் கூறினார். பின்னர் அவர் எடை மேடை அலுவலகத்தில் கணிணி மூலம் வாகனங்கள் எடை போட்டதற்கான விபரங்களை பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் ஆரல்வாய்மொழி பேரூராட்சி கவுன்சிலர்கள் மோகன், நவமணி, ஜோசப் ரெத்தினராஜ், நாகலெட்சுமி, ஏசுமணி, பாலமுருகன், இசக்கியம்மாள், பேரூராட்சி இளநிலை பொறியாளர் அண்ணாமலை, பேரூராட்சி வரி வசூலர் தனசெல்வன் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.