மதுரை, தமிழக சிறைத்துறை மூலமாக சிறையில் உள்ள சிறைவாசிகளை நல்வழிப்படுத்தும் விதமாக பல்வேறு வகையான தொழில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது அவ்வாறு பயிற்சி பெற்ற சிறைவாசிகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் தமிழகம் முழுவதும் உள்ள சிறை சந்தை மூலமாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விற்பனைக்கு வைக்கப்பட்டு வருகிறது . தமிழகத்தில் முதல்முறையாக பிரம்மாண்டமான முன்மாதிரி சிறைச்சந்தை மதுரை மத்திய சிறையில் அமைக்கப்பட்டுள்ளது . இச்சிறை சந்தையில் சிறைவாசிகள் மூலம் தயார் செய்யப்படும் இனிப்பு, கார வகைகள், எண்ணெய் வகைகள் மட்டும் இன்றி அவர்களது கலைத்திறனை வெளிப்படுத்தும் வகையிலான கட்டில், டைனிங் டேபிள் ,பீரோ, மற்றும் மர அலங்கார வேலைபாடு பொருட்கள், இரும்பு பொருட்கள் விற்பனையும் நடைபெற்று வருகிறது. பொதுமக்களின் விருப்பத்திற்கு இணங்க தேவையான வடிவங்களில் மர வேலைகள் எடுத்துக் கொள்ளப்பட்டு குறித்த நேரத்தில் தயார் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது
அலங்காநல்லூர் பெரிய வலசை கிராமத்தைச் சேர்ந்த தமிழினியன் மற்றும் சக்தி தம்பதிகளின் புதுமனை கட்டிடப் பணிகளுக்கு தேவையான நிலை கதவுகள் மற்றும் மர ஜன்னல் ஆகியவற்றை தயார் செய்து தரும் படி வேண்டினர் அவர் விரும்பிய வடிவில் தயார் செய்யப்பட்ட மரப் பொருட்களை மதுரை சரக சிறைத்துறை டிஐஜி பழனி மற்றும் மத்திய சிறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் ஆகியோர் அவர்களுக்கு விற்பனை செய்தனர். இது குறித்து சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:
மதுரை மத்திய சிறையில் சிறைத்துறை டிஜிபி மகேஸ்வர் தயாள் அறிவுரையின் பேரில் மர வேலைப்பாடு பிரிவு மற்றும் இரும்பு வேலைப்பாடு பிரிவு ஆகியவை துவங்கப்பட்டு பொதுமக்களின் விருப்பம் மற்றும் தேவைக்கேற்ப பொருட்கள் மிக குறைந்த விலையில் தயார் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது.
சமீபத்தில் தஞ்சாவூரை சேர்ந்த தம்பதியினர் தங்களது மகளின் திருமணத்திற்கு தேவையான சீர்வரிசை பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்தனர். அதனைத் தொடர்ந்து வரும் செப்டம்பர் மாதத்திற்கு தேனி மற்றும் மதுரையில் நடைபெறும் திருமணத்திற்கான சீர்வரிசை பொருட்கள் தயார் செய்வதற்காக ஆர்டர் பெறப்பட்டுள்ளது. தற்பொழுது பொதுமக்கள் மத்தியில் சிறையில் தயார் செய்யப்படும் பொருட்களுக்கான மதிப்பு உயர்ந்து வருகிறது. பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களுக்கு தேவையான பொருட்களை நல்ல தரத்தில் பெற்றுக் கொள்ளலாம். எங்களது சீர்திருத்த பணியில் பொதுமக்களின் பங்களிப்பை வேண்டுகிறோம் என தெரிவித்தனர்.