நாகர்கோவில் ஜூலை 19
ஏழை நடுத்தர மக்களை மின் கட்டணம் உயர்வு பாதித்துள்ளதாக பாஜக சிறுபான்மை பிரிவு மாநில செயலாளர் சதீஷ் ராஜா கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சதீஸ் ராஜா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் வீட்டு வரி, சொத்துவரி, தண்ணீர் வரி, பத்திரப்பதிவு கட்டணம் என அனைத்தையுமே தொடர்ந்து உயர்த்தி வருகிறது. அந்தவகையில் இப்போது மின் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. அதிலும் தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற மூன்று ஆண்டு காலங்களில் மூன்றாவது முறையாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியில் அதிகளவில் வெளியில் இருந்து மின்சாரம் வாங்கப்படுகிறதே தவிர, மின்சார வாரியத்தின் வழியே மின்உற்பத்தியை பெருக்க ஆக்கப்பூர்வமான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வெளியில் இருந்து மின்சாரம் வாங்குவதால் ஏற்பட்ட நிதிச்சுமையை அப்பாவி ஏழை மக்களின் மீது மின் கட்டண உயர்வு என்னும் பெயரில் திணிக்கிறது திமுக அரசு.
எப்போதுமே ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒருபேச்சும், ஆட்சிக்கு வந்த பின்பு ஒரு பேச்சும் பேசுவது திமுகவுக்கு கைவந்த கலை. அதேபோல் எதிர்கட்சி வரிசையில் இருக்கும்போது மின்கட்டணம் ஷாக்கடிக்கிறது என கண்டனம் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், இப்போது தன் ஆட்சியில் ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கிறார்.
நாடாளுமன்றத் தேர்தலிலும், அடுத்து நடந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் வெற்றியைத் தந்த மக்களுக்கு திமுக மின் கட்டண உயர்வை பரிசாகத் தந்துள்ளது. இதே திமுக, கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது தேர்தல் அறிக்கையில், நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் மாதம் தோறும் மின் கட்டணம் கணக்கீடு செய்யப்படும் என வாக்குறுதி அளித்து இருந்தது. அப்படிக் கணக்கீடு செய்யப்பட்டால், ஏழை, நடுத்தர குடும்பங்களுக்கு நல்ல பலன் கிடைத்திருக்கும். மின் பயனீட்டாளர்களுக்கும், மாதம் தோறும் முதல் 100 யூனிட் இலவச மின்சாரமும் கிடைத்திருக்கும். இன்னொன்று மின் பயன்பாட்டு அளவைப் பொறுத்தே கட்டண விகிதம் அதிகரிக்கிறது. மாதம் தோறும் மின்கட்டணம் கணக்கிடும் போது, மின் பயன்பாட்டு அளவும் குறையும். இதனால் மாதம் தோறும் எளிய மக்களின் பணம் மிச்சமாகும்.
ஆனால் திமுகவுக்கு எளிய, விளிம்புநிலை மக்கள் குறித்த சிந்தனை எப்போதுமே இருந்தது இல்லை. வெளியில் இருந்து கொள்முதல் செய்யாமல் மின்சார வாரியத்தின் வழியாகவே, மின் உற்பத்தியைப் பெருக்க தெளிவான திட்டமிடலும் திமுக அரசிடம் இல்லை. மொத்தத்தில் திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையால் தமிழக மக்கள் தினம், தினம் இன்னல்களை அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்கள். அதற்கு மின்கட்டண உயர்வு சமகால உதாரணம். மக்களின் நியாயமான கோரிக்கையைப் புரிந்துகொண்டு தமிழக அரசு உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தைத் திரும்பப் பெறுவதோடு, மாதம் தோறும் மின்கட்டணம் கணக்கீடு செய்யும் நடைமுறையையும் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்.”இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.