நாகர்கோவில் ஜூலை 8
குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையின் தீவிரம் சற்றே குறைந்து தற்போது மிதமான மழை அவ்வப்போது பெய்து வருவதால் திற்பரப்பு அருவியில் வழக்கத்திற்கும் அதிகமான தண்ணீர் கொட்டி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் குளித்து வருகின்றனர். குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருவதால் அணைகள் நிரம்பி வருகின்றன. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் அணைகள் வெள்ள அபாய அளவை எட்டியதால் கடந்த வாரம் நிரம்பி வழிந்தது. இதனால் கோதையாறு, குளித்துறை தாமிரபரணி ஆறு, தில்பரப்பு அருவி, பரளியாறு, பழையாறு, வள்ளியாறு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக மழை ஓய்ந்து வெயில் கொளுத்தி வருகிறது. மேலும், அவ்வப்போது மழை பெய்து வருகிறது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 44.49 அடியாக உள்ள நிலையில், அணைக்கு 464 கன அடி தண்ணீர் வருகிறது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 72.62 அடியாக உள்ள நிலையில், அணைக்கு 355 கன அடி தண்ணீர் வருகிறது. அணைகளில் இருந்து உபரி நீர் நிறுத்தப்பட்டதால், திற்பரப்பு அருவியில் மிதமான தண்ணீர் கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மீண்டும் அருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். வார விடுமுறை தினமான நேற்று சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் அருவி பகுதி களைகட்டியுள்ளது.
சுற்றுலா பயணிகள் திற்பரப்பு அருவியில் ஆனந்த குளியலிட்டனர். குமரி மாவட்டம் முழுவதும் நேற்று வெயிலின் தாக்கம் சற்று குறைந்து குளிர்ந்த காலநிலை நிலவியது.