கோவை, செப்.11:
கோவை மாவட்ட இளைஞர்கள் மத்திய அரசின் ‘விக்சித் பாரத்’ வினாடி வினாவில் அதிகளவில் பங்கேற்க வேண்டும் என மாவட்ட இளைஞர் அலுவலர் விக்னேஷ் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக கோவை ஆடிஸ் சாலையில் உள்ள செய்தியாளர் மன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:
மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை சார்பில், ‘இளம் தலைவர்கள் உரையாடல் (VBYLD) 2027’ திட்டத்தின் கீழ் மேரா யுவ பாரத் (MY Bharat) மூலம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இளைஞர்கள் நாட்டின் வளர்ச்சியில் பங்கேற்று, ‘விக்சித் பாரத் 2047’ தொலைநோக்குப் பார்வையை நோக்கி தங்களது கருத்துகள் மற்றும் புதுமையான தீர்வுகளை முன்வைக்க இந்தத் திட்டம் வாய்ப்பளிக்கிறது.
இதன் ஒரு பகுதியாக 15 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கான வினாடி வினா போட்டி, mybharat.gov.in இணையதளத்தில் ஆகஸ்ட் 17 முதல் செப்டம்பர் 30, 2026 வரை ஆன்லைனில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பவர்கள் அடுத்தகட்டமாக கட்டுரைப் போட்டி, மாவட்ட சாம்பியன்ஷிப், மாநில VBYLD மற்றும் தேசிய VBYLD போட்டிகளுக்கு முன்னேறும் வாய்ப்பைப் பெறுவர்.
மேலும், நாட்டுப்புற நடனம், நாட்டுப்புறப் பாடல், ஓவியம், பேச்சு, கவிதை உள்ளிட்ட கலை மற்றும் கலாச்சாரப் பிரிவுகளிலும், தொழில்நுட்பம், சமூகத் தீர்வுகள், தொழில்முனைவு மற்றும் நாடாளுமன்ற செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் இளைஞர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தலாம் என மாவட்ட இளைஞர் அலுவலர் விக்னேஷ் தெரிவித்தார்.



