குளச்சல், மார்ச் 23 –
குளச்சல் அருகே குறும்பனை சிலுவையார் தெருவை சேர்ந்தவர் சிஜின் மோன் (27). மும்பையில் மரைன் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மேரி கிபிலின்சா (26). இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது. சிஜின் மோன் வருடத்தில் 2 முறை ஊருக்கு வந்து செல்வது வழக்கம். அதன்படி கடைசியாக நவம்பர் மாதத்தில் ஊருக்கு வந்துவிட்டு அவர் மும்பைக்கு சென்றுள்ளார். இதனால் வீட்டில் மனைவி, குழந்தை மாமியார் உள்ளிட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை வீட்டில் மேரி கிபிலின்சா தூங்கி எழும்பும்போது, அங்கு இருந்த பீரோ அருகே மர்ம நபர் ஒருவர் கையில் பெட்டியுடன் நின்றுள்ளார். அதிர்ச்சி அடைந்தவர் சத்தம் போட்டு உள்ளார். இதையடுத்து மாமியார் குடும்பத்தினர் அங்கு வருவதற்குள் மர்ம நபர் வீட்டின் பின்பக்க கதவை திறந்து, பெட்டியுடன் தப்பி ஓடி விட்டார்.
இது குறித்து உடனடியாக குளச்சல் போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குளச்சல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் வீட்டின் பின்பக்க ஜன்னல் கம்பியை வளைத்து அதன் மூலம் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். பின்னர் பீரோவை திறந்து அதிலிருந்து சுமார் 46 பவுன் நகைகள் அடங்கிய நகை பெட்டியை கொள்ளை அடித்து விட்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கொள்ளையன் வந்த பைக் வீட்டின் பின்புறம் நின்றது. பதட்டத்தில் கொள்ளையன் பைக்கை அங்கே விட்டுவிட்டு தப்பி சென்றுள்ளார். இதையடுத்து போலீசார் பைக் பறிமுதல் செய்து, அதன் பதிவு எண்ணை வைத்து விசாரணை தொடங்கி உள்ளனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.


