வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தாளாளர் பாராட்டு
கிருஷ்ணகிரி, செப்.07.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது. இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை அருகே செயல்பட்டு வரும் துவாரகா மெட்ரிகுலேஷன் பள்ளியைச் சேர்ந்த 30 மாணவ, மாணவிகளும் இப்போட்டியில் உற்சாகத்துடன் பங்கேற்றனர். மாணவர்களிடையே ஒழுக்கம், தன்னம்பிக்கை மற்றும் உடல் வலிமையை வளர்ப்பதுடன், பாரம்பரியக் கலைகளின் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கில் போட்டி நடைபெற்றது.
பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் துவாரகா பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பாக விளையாடி பல்வேறு பரிசுகளையும் பதக்கங்களையும் வென்றனர். இதன்மூலம் துவாரகா பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்று பெருமை சேர்த்தது.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் தாளாளர் கோகுல் பாராட்டி, நினைவுப் பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து இதுபோன்ற போட்டிகளில் பங்கேற்று, மேலும் பல வெற்றிகளைப் பெற்று பள்ளிக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.



