திருவண்ணாமலை, செப். 7:
திருவண்ணாமலை மாவட்டத்தில் பல ஆண்டுகளாக வீட்டுமனை பட்டா கேட்டு போராடி வரும் இருளர் இன மக்களுக்கு உடனடியாக பட்டா வழங்காவிட்டால், சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என தென்னிந்திய பழங்குடி இருளர் முன்னேற்ற சங்கம் அறிவித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு கூட்டத்தில், சங்க மாநில பொதுச்செயலாளர் ம.சரவணன் தலைமையில் இருளர் இன மக்கள் மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க்கிடம் மனு அளித்தனர். அதில், மேலத்திக்கான், கரியான் செட்டித்தெடு, எடப்பாளையம் எம்.ஜி.ஆர். நகர், கீழ்அணைக்கரை, வேங்கிக்கால், அண்ணாநகர், மாரியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இதுவரை வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை என தெரிவித்தனர். 2024-ஆம் ஆண்டு முதல் ஜமாபந்தியில் தொடர்ந்து மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், உடனடியாக பட்டா வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
பட்டா வழங்குவதில் மேலும் தாமதம் ஏற்பட்டால், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என சங்க மாநில பொதுச்செயலாளர் ம.சரவணன் தெரிவித்துள்ளார்.



