சென்னை, செப்.05.
முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை குறித்து அமைச்சர் ராஜ்மோகன் கருத்து தெரிவித்துள்ளார். கே.என்.நேரு மூத்த அரசியல்வாதி என்றும், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை அவர் சட்டப்பூர்வமாக எதிர்கொள்வார் என்றும் கூறினார்.
மேலும், “ஒரு ரூபாய் கூட தொட மாட்டோம்; தொட்டாலும் விட மாட்டோம், தொட்டவர்களையும் விட மாட்டோம்” எனக் குறிப்பிட்ட அவர், ஊழல் விவகாரங்களில் அரசு எந்த சமரசமும் செய்யாது என தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்மோகன், தூய்மைப் பணியாளர்கள், டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டங்கள் மற்றும் தொழிற்சங்க பிரச்சினைகள் தொடர்பாக கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.
சட்டப்பேரவை நிகழ்வுகள் தொடர்பான காணொளிகள் மற்றும் பதிவுகள் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருவது, மக்கள் அரசியல்மயமாகி வருவதற்கான அறிகுறி என்றும் அவர் கூறினார். முன்பு சினிமா வசனங்கள் மற்றும் நகைச்சுவை குறித்து பேசப்பட்ட வீடுகளில் தற்போது சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்தும் விவாதிக்கப்படுவதாக தெரிவித்தார்.
மேலும், சட்டப்பேரவை நேரலை மூலம் மக்களிடம் அரசியல் விழிப்புணர்வு அதிகரித்து வருவதாகவும், இதன் மூலம் ஒரு தலைமுறையே மாற்றம் கண்டு வருவதாகவும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.



