சேலம், செப். 3:
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் சார்பில் பல்கலைக்கழகத் துறைத்தலைவர்கள், முதுநிலை விரிவாக்க மையத் தலைவர்கள் மற்றும் வினாத்தாள் தயாரிப்புக் குழுத் தலைவர்களுக்கான ஒரு நாள் பயிலரங்கம் நடைபெற்றது. தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற துணைத் தலைவர் முனைவர் விஜயகுமார் (ஓய்வு) தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சேலம் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் முன்னிலை வகித்தார்.
டி.என்.பி.எஸ்.சி., யு.பி.எஸ்.சி. உள்ளிட்ட போட்டித் தேர்வுகளின் வினாக்களின் தரத்தை சுட்டிக்காட்டி, உயர் கல்வித் தேர்வுகளுக்கான வினாத்தாள்களும் மாணவர்களின் புரிதல், பகுத்தாய்வு, தர்க்க ரீதியான சிந்தனை மற்றும் முடிவெடுக்கும் திறனை வெளிக்கொணரும் வகையில் அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. பாடத்திட்டம், கற்றல் விளைவுகள், மதிப்பீட்டு முறைகள், உயர்நிலை சிந்தனைத் திறன்களை மதிப்பிடும் வினாக்கள் மற்றும் வினாத்தாள் வடிவமைப்பு குறித்து முனைவர் விஜயகுமார் விளக்கினார். பயிலரங்கில் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் ராஜ், பேராசிரியர்கள் மற்றும் பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளின் வினாத்தாள் தயாரிப்புக் குழுத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.



