விளாத்திகுளம், செப். 2:
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளின் கலைத்திறன்களை வெளிக்கொண்டு வரும் வகையில் ஆண்டுதோறும் கலைத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பு கல்வியாண்டிற்கான வட்டார அளவிலான கலைத் திருவிழா, முதன்மைக் கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி மற்றும் உதவித் திட்ட அலுவலர் முருகன் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
கலைத் திருவிழாவிற்கு வட்டாரக் கல்வி அலுவலர் மகாலெட்சுமி மற்றும் புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமை வகித்தனர். வட்டார வளமைய மேற்பார்வையாளர் உமாதேவி முன்னிலை வகித்தார்.
‘இளையோர் திறன்’ என்ற மையக்கருத்தை அடிப்படையாகக் கொண்டு பேச்சுப்போட்டி, பலகுரல், தனிநபர் நடிப்பு, நடனம், வில்லுப்பாட்டு, இசை, கவின்கலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. புதூர் வட்டாரத்திற்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 6 முதல் 8-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
பல்வேறு போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவில் பங்கேற்க உள்ளனர். மாணவர்களின் தனித்திறன்களை வெளிக்கொண்டு வருவதுடன், கலை மற்றும் பண்பாட்டு ஆர்வத்தை வளர்க்கும் வகையில் இத்திருவிழா அமைந்தது.



