நாகர்கோவில், செப். 2: நாகர்கோவில் கோணம் அரசு பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி கலையரங்கில் இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கான அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் மு. பிரதாப் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர், பொறியியல் முதலாம் ஆண்டு படிப்பில் சேர்ந்துள்ள மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். கிராமப்புறங்களில் இருந்து பலரும், முதல் தலைமுறை பட்டதாரிகளாகவும் கல்லூரியில் சேர்ந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், பெற்றோரின் கனவை நிறைவேற்றும் வகையில் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும், கன்னியாகுமரி மாவட்டம் கல்வியறிவில் சிறந்து விளங்குவதுடன், இயற்கை வளம் கொண்ட மாவட்டமாகவும் திகழ்வதாக தெரிவித்தார். கல்லூரியில் பயிலும் 4 ஆண்டுகளை பயனுள்ளதாக பயன்படுத்தி, புதிய சிந்தனைகளையும் படைப்பாற்றலையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், கல்வியை முடித்து வெளியே செல்லும்போது சிறந்த படைப்பாளர்களாக உருவாக வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இக்கல்லூரியில் பயின்ற மாணவர்கள் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் மாதம் ரூ.1 லட்சத்துக்கும் அதிகமான ஊதியம் பெற்று வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருவதை பாராட்டிய ஆட்சியர், மாணவர்கள் பயிலும் இந்த 4 ஆண்டுகளே அடுத்த 50 ஆண்டுகால வாழ்க்கைக்கு அடித்தளமாக அமையும் என்பதை உணர்ந்து, கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியர் நற்சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் நாகராஜன், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



