தஞ்சாவூர், செப். 1:
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 80 வயது முதியவர் ஒருவர் விஷ பாட்டிலுடன் வந்து மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஒரத்தநாடு தாலுகா மேலஉள்ளூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர் கண்ணையன், தனது இரு மகன்களும் சொத்துகள், நகை மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு தன்னை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக மனுவில் தெரிவித்துள்ளார். தற்போது வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும், வாழ்வதற்கு வழியின்றி தவித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தனது சொத்துகளை மீட்டுத்தரக்கோரி ஏற்கனவே தஞ்சாவூர் கோட்டாட்சியரிடம் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கண்ணையன் புகார் தெரிவித்தார். இதனால் விஷம் குடிப்பதைத் தவிர வேறு வழியில்லை எனக் கூறி, தான் கொண்டு வந்த விஷ பாட்டிலை மாவட்ட ஆட்சியர் முன்பு மேஜையில் வைத்தார்.
இதைக் கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக விஷ பாட்டிலை கைப்பற்றி, முதியவரிடம் விசாரணை நடத்தினர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் ரேவதி, பொதுமக்கள் கொண்டு வரும் பைகள் மற்றும் பொருட்களை போலீசார் முறையாக சோதனை செய்தார்களா என விசாரித்தார். இனிவரும் காலங்களில் பாதுகாப்புப் பணியில் போலீசார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடந்தால் சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.



