நாகர்கோவில், ஏப். 13 –
சட்டமன்ற தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 23ம் தேதி அன்று ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி தேர்தல் ஆணையத்தின் முறையான வாக்குப்பதிவு விழிப்புணர்வு மற்றும் கல்வித் திட்டத்தின் கீழ் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டத்தின் பல பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி அலங்கார உபகார மாதா ஆலயத்திற்கு அருகில் உள்ள கடற்கரை பகுதியில் ஏராளமான நாட்டுப்படகுகள் ஒன்றிணைக்கப்பட்டு, ‘VOTE’ என்ற வடிவில் நிறுத்தப்பட்டு, தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இது கடற்கரைக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தியது.
இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி பொது பார்வையாளர் சுபஸ்ரீ நந்தா தலைமையில் அலுவலர்கள், மீனவர்கள், மீனவ பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் வாக்காளர் உறுதிமொழி ஏற்றுகொண்டார். துணை இயக்குநர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கோபிநாத், செயற்பொறியாளர் மீன்பிடித்துறைமுக கோட்டம் பிரேமலதா, உதவி இயக்குநர் தீபா, மீனவர்கள், மீனவ பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



