தஞ்சாவூர், செப். 1:
பெரம்பலூர் ஹான்ஸ் ரோவர் கல்லூரியில் 2026-27 கல்வியாண்டுக்கான திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு இணைவு பெற்ற கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.
ஆடவர் பிரிவில் தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மாணவர்கள் சிறப்பாக விளையாடி முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றனர். இதன் மூலம் சரபோஜி அரசு கல்லூரி டென்னிஸ் பிரிவில் முதன்முறையாக பல்கலைக்கழக அளவில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது.
வெற்றி பெற்ற அணியில் முதுநிலை முதலாம் ஆண்டு மாணவர் தீபக், இளநிலை கணினி அறிவியல் முதலாம் ஆண்டு மாணவர் திருமாறன், முதுநிலை கணிதவியல் இரண்டாம் ஆண்டு மாணவர் ராகுல் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
மாணவர்களை ஊக்குவித்து வழிநடத்திய உடற்கல்வித்துறை இயக்குநர் சந்தோஷ் குமார் மற்றும் சாதனை படைத்த மாணவர்களை கல்லூரி முதல்வர் சுமதி பாராட்டினார். மேலும், கல்லூரி விளையாட்டுக் குழு உறுப்பினர்கள் மற்றும் பேராசிரியர்கள் மாணவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.



