நாகர்கோவில், ஆக. 29:
கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, புகையிலை உள்ளிட்ட போதைப்பொருட்களின் விற்பனை மற்றும் பயன்பாட்டை முற்றிலும் கட்டுப்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையில் போலீசார் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக, இரணியல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து குளச்சல் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் காந்தி மேற்பார்வையில், இரணியல் காவல் ஆய்வாளர் அந்தோணியம்மாள் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில் 1 கிலோ 550 கிராம் தடை செய்யப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா வைத்திருந்ததாக நெய்யூர் மேல்கரையைச் சேர்ந்த மணிகண்டன் (23), தலக்குளம் புதுக்குளத்தைச் சேர்ந்த பிரசாத் (22), கோவில் விளாகம் பூத்துறையைச் சேர்ந்த டெக்ஸ்ட் ரோஸ் (28) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவுடன் 3 பேரும் இரணியல் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இவர்களுக்கு கஞ்சா எங்கிருந்து கிடைத்தது, வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் போதைப்பொருட்களின் விற்பனை மற்றும் பயன்பாட்டை தடுக்கும் வகையில் தொடர் சோதனைகள் மற்றும் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், சட்டவிரோத போதைப்பொருள் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.



