மதுரை, ஆக.29.
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் குடமுழுக்கு விழா செப்டம்பர் 17-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடு பணிகளை மின்சாரத்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் இன்று இரண்டாவது முறையாக ஆய்வு செய்தார். மாநகர காவல் ஆணையாளர், மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் கோவிலுக்குள் சென்று பக்தர்கள், முக்கியஸ்தர்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுடன் சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடத்திய அமைச்சர், குடமுழுக்கை முன்னிட்டு சுமார் 5,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார். பக்தர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருவதாகவும், வீர வசுந்தராயர் மண்டபம் நாளை திறக்கப்பட உள்ளதாகவும் கூறினார்.
குடமுழுக்கு அழைப்பிதழில் திமுகவைச் சேர்ந்த அறங்காவலர் குழு உறுப்பினர்களின் பெயர்கள் இடம்பெறாதது குறித்து பேசிய அமைச்சர், “கோவில் விவகாரத்தில் அரசியல் தலையிடக் கூடாது. உண்மையான பக்தர்களாக இருந்து கோவிலுக்கு பணியாற்றக்கூடியவர்களே அறங்காவலர் குழுவில் இடம்பெறுவார்கள்” என தெரிவித்தார்.
மேலும், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தமிழக வெற்றிக் கழக அரசை விமர்சித்து வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார், “அதிமுகவை அழிவுப் பாதைக்கு கொண்டு சென்றதில் 100 சதவீத பங்கும் ஆர்.பி. உதயகுமாருக்குத்தான் உள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்தபடியாக பொதுச்செயலாளராக முயற்சித்து வருகிறார்” என கடுமையாக விமர்சித்தார்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானம் தொடர்பான சர்ச்சை குறித்தும் அமைச்சர் கருத்து தெரிவித்தார். ஜல்லிக்கட்டு தமிழர்களின் உணர்வு சார்ந்த விஷயம் என்றும், பாரம்பரியமாக நடைபெற்று வரும் வாடிவாசல்களை அனைவரும் அறிந்திருப்பதாகவும் அவர் கூறினார்.
குடமுழுக்கு விழாவை முன்னிட்டு அங்கீகரிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அனுமதி ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும், ஊடகங்களுக்கு தனி இடம் ஒதுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். மேலும், குடமுழுக்கு விழா நேரலைக்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படாது என்றும், நேரலைக்கான YouTube இணைப்பு வழங்கப்படும் என்றும் கூறினார்.



