கிருஷ்ணகிரி, ஆக.28.
கிருஷ்ணகிரி மாவட்டம் எலுவப்பள்ளி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், கடந்த 05.03.2025 அன்று மதிய உணவு இடைவேளையின்போது 3-ஆம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுவன் நிதின், பள்ளி வளாகத்திற்கு அருகே இருந்த விவசாயப் பண்ணைக் குட்டையில் தவறி விழுந்து உயிருக்கு போராடியுள்ளார். இதைக் கண்ட பள்ளித் தலைமையாசிரியர் பி.எஸ். கௌரிசங்கர் ராஜா, சிறுவனைக் காப்பாற்ற துணிச்சலுடன் முயன்றுள்ளார். எதிர்பாராதவிதமாக சிறுவனும், தலைமையாசிரியரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
சிறுவனின் உயிரைக் காப்பாற்ற தனது உயிரையும் பொருட்படுத்தாமல் துணிச்சலுடன் செயல்பட்ட தலைமையாசிரியர் கௌரிசங்கர் ராஜாவின் வீரதீரச் செயல், அசாதாரண துணிச்சல் மற்றும் உன்னத தியாகத்தைப் பாராட்டி, ஒன்றிய அரசின் மரணத்திற்குப் பிந்தைய “சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா” விருதுக்கு அவர் தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து, மறைந்த தலைமையாசிரியரின் மனைவி கொ. சிரிஷாவிடம், ஒன்றிய அரசின் “சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா” விருதுக்கான பதக்கம் மற்றும் சான்றிதழை தமிழ்நாடு முதலமைச்சர் 27.08.2026 அன்று வழங்கி சிறப்பித்தார். உயிரைக் காப்பாற்றும் உயரிய முயற்சியில் தனது உயிரையே தியாகம் செய்த தலைமையாசிரியரின் தியாகத்திற்கு இந்த விருது உரிய அங்கீகாரமாக அமைந்துள்ளது.



