சென்னை: ஆக.25.
2010-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23-ஆம் தேதிக்கு முன்பாக பணியில் சேர்ந்த நீண்டகால ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வான ‘டெட்’ (TET) தேர்வில் இருந்து முழுமையான மற்றும் நிரந்தர விலக்கு அளிக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் இந்தத் தீர்மானத்தை சட்டப்பேரவையில் கொண்டு வந்தார். இதற்கு திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இதையடுத்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தின் 2010-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23-ஆம் தேதியிட்ட அறிவிக்கையின்படி, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் நியமனம் பெறுவதற்கான தகுதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதும் கட்டாயமாக்கப்பட்டது.
இந்நிலையில், பல ஆசிரியர்கள் 15 முதல் 20 ஆண்டுகளுக்கும் மேலாக எவ்வித இடையூறும் இன்றி பணியாற்றி வருகின்றனர். அவர்கள் தங்களது நீண்டகால பணி அனுபவத்தின் அடிப்படையில் பள்ளிக் கல்வித் துறையில் தொடர்ந்து பணியாற்றி வரும் நிலையில், தற்போது டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவின் காரணமாக, தமிழகத்தில் சுமார் 3.28 லட்சம் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் பதவி உயர்வு பெற முடியும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளதாக தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பு தொடர்பாகவும் கவலை எழுந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, பணியில் இருக்கும் ஆசிரியர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளதால், ஓய்வு பெறும் வயதை நெருங்கியுள்ள நீண்டகால ஆசிரியர்களிடையே பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
15 முதல் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தடையின்றி பணியாற்றிய ஆசிரியர்களை தற்போது தகுதித் தேர்வு எழுத வற்புறுத்துவது அவர்களின் பணி பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என தமிழக அரசு கருதுகிறது. எனவே, ஆசிரியர்களின் நீண்டகால சேவை, பணி அனுபவம், பணிப் பாதுகாப்பு மற்றும் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு டெட் தேர்வில் இருந்து விலக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, 2010 ஆகஸ்ட் 23-க்கு முன்பாக அன்றைய நடைமுறையில் இருந்த விதிமுறைகள் மற்றும் தகுதிகளின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு டெட் தேர்வில் இருந்து முழுமையான மற்றும் நிரந்தர விலக்கு அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை தமிழக சட்டப்பேரவை ஒருமனதாக வலியுறுத்தியுள்ளது.
மேலும், இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009-ன் பிரிவு 23-ல் தேவையான சட்டத் திருத்தங்களை மேற்கொண்டு, 2010 ஆகஸ்ட் 23-க்கு முன்பாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு டெட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனுடன், தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் மூலம் இந்த விவகாரம் தொடர்பாக தெளிவான மற்றும் ஒருமித்த அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் மத்திய அரசை தமிழக சட்டப்பேரவை கேட்டுக்கொண்டுள்ளது.



