திருப்பூர், 18.08.2026
குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை ஐ.ஜி ரூபேஸ்குமார் மீனா உத்தரவு படி, எஸ்.பி (பொறுப்பு) ஶ்ரீனிவாசபெருமாள், டி.எஸ்.பி (பொறுப்பு) ரமேஷ்குமார் ஆகியோர் மேற்பார்வையில் ரேசன் அரிசி கடத்தலை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், திருப்பூர், கனியாம்பூண்டி – ராக்கியாபாளையம் ரோட்டில் ரேசன் அரிசி கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அந்த தகவல் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் ராஜசேகர், எஸ்.ஐ அன்சாரி மற்றும் போலீசார் ராக்கியாபாளையம் தில்லை நகரில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அரசால் இலவசமாக வழங்கப்படும் 1820 கிலோ ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
போலீசார் தொடர்ந்து செய்த விசாரணையில் அவர் திருப்பூர், வெள்ளியங்காடு, பட்டுக்கோட்டையார் நகரை சேர்ந்த சபி (35) என்பதும், அவர் கனியாம்பூண்டி, வஞ்சிபாளையம், ராக்கியாபாளையம் ஆகிய பகுதியில் பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேசன் அரிசிகளை வடமாநிலத்தவர்களுக்கு கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்ய கடத்தி சென்றது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிவு செய்து சபியை கைது செய்தனர். மேலும், 1820 கிலோ அரிசி, ஆம்னி கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்..



