கோவை, ஆக. 06 –
காரமடை டாக்டர்.ஆர்.வி.கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு அமைப்பின் கீழ் “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை” சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் சி.என்.ரூபா தலைமை வகித்தார். தமிழ்த்துறைத் தலைவர் ஜெயந்தி அனைவரையும் வரவேற்றார்.
தமிழக அரசால் நியமிக்கப்பட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படைக் குழுவின் காவல் உதவி ஆய்வாளர் அமிர்த பிரியா, தலைமைக் காவலர் கீதா, காவலர் செல்வி, இந்துமதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
அவர்கள் பேசிய உரையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது, பெண்களின் சுயபாதுகாப்பு, இணையவழி குற்றங்களில் இருந்து பாதுகாப்பு,போதைப்பொருட்களின் தீமைகள், சாலை விபத்துகளை தடுக்கும் வழிமுறைகள் மற்றும் அவசரகால உதவி எண் 1091-இன் பயன்பாடுகள், நிழல் செயலியை பயன்படுத்தும் முறைகள், மாணவிகள் தன்னம்பிக்கையுடனும் விழிப்புணர்வுடனும் சமூகத்தில் செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.
இதனைத்தொடர்ந்து இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் காரமடை, கேமியா பவுண்டேசன் பொதுச்செயலர் பமீலா பாதுகாப்பான மற்றும் போதையற்ற சமூகத்தை உருவாக்குவதற்கான உறுதிமொழி கூறினார்.இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் நிர்வாக மேலாளர் மனோகரன், கணிதவியல் துறைத் தலைவர் திருமதி.உமாப்ரியா, அனைத்து துறைப் பேராசிரியர்கள்,மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.



